தந்தை பெரியார் விதைத்த விதை

தந்தை பெரியார் விதைத்த விதை

இனமுரசு சத்யராஜ் இங்கு அமர்ந்திருக்கின்றார்.

சில பேர் வாய்ப்பு இல்லாத நேரத்தில் சொல்லுவார்கள். ஆனால் சத்யராஜ் அவர்கள் கலைத்துறையிலே உச்சக் கட்ட வாய்ப்பிலே இருக்கின்றார். அவர் இந்த நிலையிலே எதைப்பற்றியும் கவலைப்படாமல் சொல்லுகின்றார் பெரியார் படம் எடுத்தால் அதற்கு நான் பணம் வாங்காமல் இலவசமாக நடிப்பேன் என்று சொல்லுகின்றார்.

எனக்கு இலட்சங்கள் முக்கியமல்ல; இலட்சியங்கள் தான் முக்கியம் என்று சொல்லுகின்றாரே நண்பர்களே! பெரியார் விதைத்த விதைகள் எப்படி எல்லாம் முளைத்து, எப்படி எல்லாம் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடியிருக்கிறது என்பதை நினைத்து நினைத்து பெருமிதம் கொள்ளுகின்றேன் நண்பர்களே.

டில்லியில் பெரியார் கொள்கைகள்

சீதாராம் கேசரி டில்லியிலே அகில இந்திய காங்கிரஸ் தலைவர். ஒரு காலத்திலே காங்கிரஸ் என்பது அக்கிரகாரம் என்பதை அனைவரும் அறிவோம். ஒரு காலத்தில் என்ன? நேற்று வரையிலே அவர் யாரை வெளியே அனுப்பி அந்த இடத்திலே உட்கார்ந்திருக்கின்றார். இது தானே சரித்திரம்!

அங்கே பெரியாருடைய கொள்கை புன்முறுவலோடு வீற்றிருக்கின்றது. அறுவடை செய்கிறார்கள் என்று சொல்லுகின்றார்களே, ஆம் டில்லியிலே அறுவடை செய்கின்றோம் நாங்கள்.

மூளையில் போட்ட விலங்கு

இந்த இயக்கத்தை இந்தக் கொள்கையை அழித்துவிட முடியுமா? நம்மால்தான் இந்தக் கொள்கைகளை எடுத்துச் சொல்ல முடியும். மனிதனுக்குக் கையிலே போட்ட விலங்கைவிட, காலிலே போட்ட விலங்கைவிட, மூளையிலே போடப்பட்ட விலங்குதான் ஆபத்தான விலங்கு! பெரியார் என்ற மாபெரும் சம்மட்டி இருக்கின்றதே அந்தச் சம்மட்டி மூலம் அடித்தால்தான் அந்த விலங்கு உடையும். அதிலே இலாவகமும் வேண்டும் சாமர்த்தியமும் வேண்டும்.

திடுக்கிடக்கூடிய தகவல்

உங்களுக்கு அதிர்ச்சி ஊட்டக்கூடிய, திடுக்கிடக்கூடிய ஒரு தகவலைச் சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். மதவாதம் இன்றைக்குத் தலைதூக்கி ஆடுகின்றது. நம்நாட்டில் இந்த மதக்கலவரங்களுக்கெல்லாம் காரணம் என்ன? ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., விசுவ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் பார்ப்பனியத்தினுடைய மறு பதிப்புகளாக விளங்குகின்ற அமைப்புகள் உள்ளே புகுந்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்று இன்றைக்குத் தலைகீழாக நின்று கொண்டிருக்கின்றார்களே! அதனுடைய சக்தி என்ன என்பதை நண்பர்களே நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

வரலாறு பழிவாங்கியது

இந்த இயக்கம் இல்லாவிட்டால் வாஜ்பாய்கள் ஆட்சி நீடித்திருக்காதா? சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது ஆட்சியை 10 மாதங்களில் கீழே இறக்கிவிட்டோம் என்று மார்தட்டினீர்களே? நீங்கள் 10 மாதமாவது உட்கார முடிந்ததா? உங்களை வரலாறு பழி வாங்கியது! எப்படிப் பழி வாங்கியது? பெரியார் மூலம் பழிவாங்கியது. பதின்மூன்றே நாட்களிலே பி.ஜே.பி. ஆட்சி இறக்கப்பட்டது. அது எப்படி முடிந்தது? அதற்கு அரசியலா முக்கிய அடிப்படை காரணம்?

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் இது புரியாது. அதற்குப் பெரியார் என்ற நுண்ணாடியைப் போட்டு பார்த்தால்தான் சில விசயங்கள் தெளிவாகத் தெரியும். அது ஈரோட்டுக் கண்ணாடி; அதுதான் முன்னாடி.

மதவாதம் எப்படி சாம்ராஜ்யங்களைச் சாய்க்கும் சக்தி படைத்தது என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். ஏதோ நான் கற்பனையாக சொல்கிறேன் என நினைக்கவேண்டாம் நண்பர்களே! ஒரு அருமையான ஆதாரத்தை உங்கள் முன்னாலே வைத்து விளக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். மிகப்பெரிய அளவிலே உருவாக்கப்பட்ட நாடு சோவியத் யூனியன்; கம்யூனிச பூமி. சோவியத் யூனியனில் மார்க்சிய சித்தாந்தங்கள் மூலம் புரட்சி வெடித்து, அதற்குப் பிறகு இரும்புத் திரை விடப்பட்டது. பின்னர் அது சமதர்ம பூமியாக என்று உருவாக்கப்பட்டது; ஸ்டாலின் மிகப் பெரிய திறமையோடு அதை உருவாக்கி வைத்திருந்தார்.

சோவியத் சிதறுண்டது

அந்த சோவியத் நாடு சிதறுண்டு உடைந்துபோனது. இதில் பல நாடுகள் விடுதலை அடைந்தன என்பது முக்கியமல்ல; ஆங்கே கம்யூனிசம் தோற்றுவிட்டது; கம்யூனிசத்தை வீழ்த்தி விட்டோம் என்று மதவாதிகளும், முதலாளித்துவமும் மற்றவர்களும் மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே இது எப்படி நடந்தது தெரியுமா? வெறும் அரசியலா காரணம்? கார்பசேவ் ஓர் அணுகுமுறையைக் கொண்டு வந்தார். அதனால் பெரிய அளவிற்குக் கிளர்ச்சிகள் நடந்தன என்பதாலா? அல்ல, நண்பர்களே அல்ல.

அமெரிக்காவிலிருந்து ஒரு புத்தகம் வந்திருக்கின்றது. இதைப்பற்றி நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும். இது நமக்குப் பாடமாக வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியச் செய்தியாகும்.

காலத்தை முன்னோடியாகக் கருதிக் கடமை ஆற்றக்கூடிய ஆற்றல் நம்முடைய இயக்கத்திற்கு மட்டுமே உண்டு.

அமெரிக்க நூலில் தகவல்

அந்தப் புத்தகத்தின் பெயர் ‘His Holyness Jhon Paul Second and Hidden History of our time’  போப் ஆண்டவர் என்று இப்போது அழைக்கப்படுகின்ற அந்த போப்பைப் பற்றி ஆதாரப்பூர்வமான தகவல்களைக் கொண்ட சிறப்பான நூல். இந்த நூல் அண்மையில்தான் வெளிவந்திருக்கிறது.

சி.அய்..மூலம் உடைப்பு

இந்தப் புத்தகத்திலே திடுக்கிடக் கூடிய தகவல்கள் வந்திருக்கின்றன. கார்பசேவைக் கையிலே வைத்துக்கொண்டு, சோவியத் யூனியனை உடைத்துக் கம்யூனிசத்தை அங்கே சிதைத்து இவ்வளவையும் செய்யக்கூடிய வாய்ப்பை யார் மூலம் அமெரிக்கா நடத்தியது தெரியுமா? அதற்கு சி.அய்..வை எப்படிப் பயன்படுத்தியது என்று சொன்னால் இந்தப் புத்தகத்திலே அதற்கு ஆதாரங்கள் ஏராளம் இருக்கின்றன.

சோவியத் யூனியனை உடைக்க எதைச் செய்தார்கள் என்று சொன்னால், போப்பைப் பயன்படுத்தினார்கள். எளிதாக முடித்தார்கள்!

போப்பும், கார்பசேவும் இரகசியமாகச் சந்தித்தார்கள். இரண்டு பேரும் ஒரே இனத்தைச் (ஸ்லாவ்) சார்ந்தவர்கள் என்ற ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அதைச் செய்தார்கள்!

சோவியத்தில் போப்புக்கு வரவேற்பு

ஒரு காலத்திலே ஒரு தீவிர தொழிற்சங்கவாதியாக இருந்த, ஒரு பிரிவைச் சார்ந்தவர்தான் மைக்கேல் கார்பசேவ், அவரையும் போப்பையும் சந்திக்க வைத்தார்கள். பின்னர் சோவியத் யூனியனுக்குள் மதக் கதவைத் திறந்துவிட வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்காகவே சோவியத் யூனியனில் போப்புக்கு வரவேற்பு கார்பசேவ் கொடுத்தார்.

அதற்குப் பிறகுதான் கம்யூனிசத்திற்கு அங்கே வீழ்ச்சி ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது. உண்மையிலேயே இப்போது கூட நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். கம்யூனிசத்திற்கல்ல அந்தத் தோல்வி. கம்யூனிசத்தை வைத்து அரசியல் நடத்தியவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி அது. கொள்கையால் ஏற்பட்ட தோல்வி அல்ல. அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தினார்கள்.

இதைப்பற்றி இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மிக அருமையான ஒரு தகவலைச் சொல்லுகின்றார். நம்முடைய நாட்டைச் சேர்ந்தவர்கள் பெற வேண்டிய பாடம் அதிலே நிரம்ப இருக்கிறது.

ஸ்டாலினிடம் கேட்ட கேள்வி

இரண்டாவது உலகப் போர் நடந்த நேரத்தில் ஸ்டாலின் சோவியத் நாட்டின் பொறுப்பிலே இருக்கின்றார். ஒருவர் ஸ்டாலினிடம் அப்போது கேட்கிறார் நாம் வாட்டிகனை எதிர்த்தால் மற்ற கத்தோலிக்க நாடுகள் நமக்கு எதிராகத் திரும்புமே என்ன செய்வது என்று. அதற்கு ஸ்டாலின் திருப்பிக் கேட்டாராம். How many divisions has the Pope?  போப்பிடம் எவ்வளவு படை வரிசைகள் இருக்கின்றன? போப்பிடம் ஒருபடை வரிசையும் கிடையாதே. ஆகவே நம்மை என்ன செய்ய முடியும்? நம்மை அசைக்க முடியுமா? என்ற பொருளில் ஸ்டாலின் அப்போது கேட்டாராம்!

வாட்டிகன் சோவியத்தை வீழ்த்தியது

படையே இல்லாத வாட்டிகன்தான் பலமான சோவியத் யூனியனை வீழ்த்தியது.

எதன் மூலம்? மதத்தின் மூலம்! மதவாதத்தின் மூலம்!! மத சக்திகளைப் பயன்படுத்தி, மதத் தலைவர்களைப் பயன்படுத்தி, சோவியத் ரஷ்யாவில் நடந்ததுபோல இந்தியாவிலும் நடக்க வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், பார்ப்பன பாசிச அமைப்புகளும் இதைத்தான் செய்ய விரும்புகின்றன. நம்மைப் போன்றவர்கள்தான் இதைக் கண்டிக்க முடியுமே தவிர, அரசியல்வாதிகள் மதவாதத்தினைக் கண்டிக்க மாட்டார்கள். காரணம் அவர்களுக்குப் பதவிதான் முக்கியமே தவிர, வேறு எதுவும் அல்ல.

அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பு வரும்போது என்ன சொல்வார்கள்? எந்தக் கட்சியும் எங்களுக்கு தீண்டாத கட்சி கிடையாது அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது நிரந்தர எதிரிகளும் கிடையாது. என்றெல்லாம் சொல்லுவார்கள். தீண்டாமை ஒழிப்புத் தத்துவத்தை அங்கேயாவது அவர்கள் ஞாபகப்படுத்திக் கொள்கிறார்களே. அதற்காக மகிழ்ச்சி!

சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ்

இந்த மதவாதக் கட்சிகள் ஒழிக்கப்படவேண்டிய கட்சிகள் என்பதை மார்தட்டிச் சொல்லக்கூடிய தற்கொலைப் பட்டாளங்கள்தான் நாம் என்பதை மறந்துவிடாதீர்கள்இதற்கு நாம் சாலை அமைக்கவேண்டும். சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ் என்று சொல்லக்கூடிய பட்டாளத்திற்கு முன்னாலே பாதையமைப்பது போன்றது நம்முடைய வேலை. நம் வேலை எப்போதுமே கடினமானதுதான். பின்னாலே வருபவர்களுக்குத் தான் இது எளிதாக இருக்கும்.

பாதைகள் அமைக்கக்கூடிய பணிகளை நாம் செய்யக்கூடியவர்கள். துப்புரவுத் தொழிலாளிக்கு என்ன வேலை? அசிங்கத்தையெல்லாம் சுமக்கவேண்டும். நமக்கு இதனால் மணம் வீசாது. நாம் எல்லாரும் சமுதாயத்தினுடைய துப்புரவுத் தொழிலாளிகள். ஆகவே, இவைகளை எல்லாம் நாம் செய்தாகவேண்டும் என்று சொல்லும்போது நான் ஆட்சியாளர்களுக்கும் வரவிருக்கிற ஆபத்தை சேர்த்துச் சொல்லுகிறேன்.

இரும்புத் திரையை உடைத்தார்

ரீகன் அமெரிக்க அதிபராக இருந்தபொழுது சி.அய்.. வைப் பயன்படுத்தி, சி.அய்.., போப்பைப் பயன்படுத்தி மிகநீண்ட காலமாக இருந்த இரும்புத் திரை நாடான சோவியத் யூனியனையே சாதாரணமாக உடைத்துவிட்டார்கள். அந்த நிலை இங்கே வராது என்று சொல்லுவதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது.

ஜாதி ஒழிப்பு என்பதைப் பற்றி சொல்லும்போது நான் சொல்ல நினைத்ததை நண்பர் சத்யராஜ் மிக ஆழமாகச் சொன்னார்கள். அதுதான் அவர் சுயமரியாதை உணர்வு படைத்தவர் என்பதைக் காட்டுகிறது. ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால் மதத்தை ஒழிக்கவேண்டும். மதத்தை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன செய்யவேண்டும்? கடவுளை ஒழிக்கவேண்டும். அவ்வளவுதானே தவிர வேறொன்றுமில்லை. அய்யா அவர்களுடைய தத்துவத்தை சத்யராஜ் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டதால் மிக அழகாக இதை எடுத்துச் சொன்னார். கடவுள் பிரச்சாரத்தை எப்படி எல்லாம் புகுத்தியிருக்கிறார்கள் என்பதை நன்றாகச் சொன்னார்கள். பல கோடி ரூபாய் வைத்திருக்கின்ற பக்திமான்கள் நம்பிக்கை இல்லாமல் எங்கேயோ ஒரு மூலையில் இருக்கிற பிள்ளையார் கோயில் மேல் நம்பிக்கை வைத்துவிட்டான் பாருங்கள். ஒரு பிள்ளையார் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் அவர்களுடைய அறிவிலே, ஆற்றலிலே நம்பிக்கை வைப்பதில்லை.

கொள்கை - ஒழுக்க வாழ்வு உடல்வளம்

பொதுவாக நாட்டில் பரவலாக உள்ள ஒழுக்கச் சிதைவு சீர்கேட்டை-சிதைவை தடுத்து நிறுத்தவேண்டும். பண்பாட்டுப் படையெடுப்பினால் ஏற்பட்ட கேடுகளை நாம் களைந்தாக வேண்டும். சமுதாய இயக்கமான நமது இயக்கத்தால் மட்டுமே இது முடிந்த ஒரு அரிய பணியாகும்.

இளம் பருவத்திலேயே - இருபால் இளைஞர்களாக இருப்பாரை நாம் அணுகி - இளம் மாணவ வாலிபர்களை நம் இயக்கத்தில் சேர்த்து - கொள்கை, பண்பாட்டுடன் இணைந்த ஒழுக்கவாழ்வு, நல்ல உடல் வளம் ஆகிய முக்கோணத்தை அவர்களுக்கு முன்னிறுத்திக் காட்டவேண்டும்.

இதற்காக ஆக்கரீதியான பிரச்சாரப் பணிகளை ஒவ்வொரு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மாணவ - மாணவியரிடையே துவக்கி நடத்தி, தமிழ்நாட்டில் உள்ள அத்துணை உயர்நிலைப் பள்ளி. மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர்களை வாயிற் கூட்டங்கள் வாயிலாகச் சந்தித்து பிரச்சாரத்தினை செய்திடவேண்டும்.
அவர்களிடையே நமது இயக்கத்தின் 10 கட்டளைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திடவேண்டும்.

தந்தை பெரியார் நெறிகள் பத்து!

1.ஜாதி மறுப்புத் திருமணம், விதவை மறுமணம், மணவிலக்குப் பெற்றவரை மறுவாழ்வுத் திருமணம் செய்து கொள்வேன். வர(ன்) தட்சணை வாங்குவது சுயமரியாதை இழக்கும் கொத்தடிமை முயற்சி - என்னை நான் ஒருபோதும் விற்கமாட்டேன் என்று சூளுரைக்கிறேன்.

2.கடவுள், மதம், ஜாதி, சினிமா, மது, மருந்து என்ற பல்வகை போதைகளும், மூடநம்பிக்கைகளும் அண்டாத பெரு நெருப்பாக வாழ்வேன்.

3.சுற்றுச்சூழலை தூய்மையாக்குவதிலும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படாது காக்கும் பொது ஒழுக்கத்தை நிலைநாட்டவும் என்னையே நான் ஒரு சமூகக் காவலனாக ஆக்கிக் கொண்டு வாழ்வேன்.

4.நல்ல உடல் நலமே, நல்ல உளநலத்திற்கான ஊற்றுக்கண் என்பதை உணர்ந்து வாழ்வதுடன் ஊர் நலம், உலக நலம் ஓம்பும் மானுடத்தின் உண்மைத் தொண்டனாக என்னையே நான் அர்ப்பணித்துக்கொள்வேன்.

5.கடவுளை மற, மனிதனை நினை என்ற அறிவு ஆசான் வழிப்படி மனிதநேய மாண்பாளனாகவே எனது வாழ்வை அமைத்து, சொல்வதைச் செய்வதும், செய்வதை மட்டுமே சொல்வது ஆகிய சுயமரியாதை சுகவாழ்வை மேற்கொள்வேன்.

6.வேலை கேட்டு விண்ணப்பம் போட்டு அலுக்காமல், வேலை தரும் நிலைக்கு உயரும் வகையில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையே எனது கடமையாகக் கருதி வாழ்வேன்.

7.எளிமை, சிக்கனம், பிறபாலரிடம் பண்புடன் பழகும் பான்மையை என்றும் வளர்த்துக் கொள்வேன்.

8.பண்பாட்டுப் படையெடுப்புகளினால் பாழான எனது இனத்தின் மீட்புக்கான களப்பணியாளனாக என்றும் இருப்பேன்.

9.இளமை என்பது வளமைக்காக என்று நினைக்காமல், தொண்டுக்காக - அதுவும் சமுதாயத் தொண்டுக்கான வாய்ப்பே என்றும் கருதி என்றும் உழைப்பேன்.

10.மற்றவர் உன்னை எப்படி நடத்தவேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அப்படி நீ பிறரிடம் நடந்துகொள் - அதுவே ஒழுக்கம் என்ற தந்தை பெரியார் தம் உயர் ஒழுக்கநெறிகளை அதுவே மனிதநேயப் பண்பு என்று சிந்தையில் ஏற்று செயலாற்றி புதிய உலகினை உருவாக்கும் தூதுவனாக வாழ்வேன்.

பத்துக்கட்டளைகள் என்பவைதான் இளைஞர் சமுதாயத்தினருக்கு சரியான மாமருந்து. தந்தை பெரியார்தம் பகுத்தறிவு வாழ்வியல் சிந்தனைகள், இளைஞர்தம் நோய்களை, நோய் நாடி, நோய் முதல்நாடி, விரட்டி, அவர்களைப் புதிய உலகில் அருமையான செயல்வீரராக ஆக்கிடப் பெரிதும் உதவும்!

நல்ல உடல் வளமும், நலமும் தான் எல்லார்க்கும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பதால், நாடு முழுவதும் இளைஞர்களுக்கான தந்தை பெரியார் உடல் நல மய்யங்கள் (பெரியார் ஹெல்த் சென்டர்) ஒவ்வொரு கிராமந்தோறும் துவக்கி, வாரம் இரண்டு முறையாவது குறைந்தபட்சம் பயிற்சிக்கான - கராத்தே உட்பட பலவும் அளிக்க வேண்டும்.

புத்துணர்ச்சிக்கு இயக்கப்பணி

பொழுதுபோக்கு (ரெக்ரியேஷன்) (Recreation) என்ற பெயரால், இளைப்பாறுதல் (ரிலேக்ஷேன்) (Relaxation ) என்ற பெயரால் கண்டதைக் கேட்டும், பார்த்தும் அவர்கள் பாழாகாமல் இருக்க- பொழுதுபோக்கு, இளைப்பாறுதல், மன உளைச்சல் (Stress) அற்ற ஒரு எளிய நல்வாழ்வை, அவர்களுக்கு அளிப்பதை இயக்கம், தக்காரைக் கொண்டு செய்யும். ஒலி, ஒளி வழிக்காட்சிகள், சீரிய சிந்தனைக்குரிய நூல்கள் பற்றிய தகவல்கள், அருவருப்பும் ஆபாசமும் அற்ற நகைச்சுவை உணர்வைத் தூண்டி, சிரித்து, சிந்தித்து மகிழத்தக்க பல ஓரங்க நாடகங்கள், வீதிக் கூத்துகள் இவைகளில் அவர்களை ஈடுபடச் செய்து (ஓய்வு நேரத்தில்) மீண்டும் தாங்கள் வழக்கமாக அன்றாடக் கடமையை செய்யப் புத்துணர்ச்சி பெற்றவர்களாக அவர்களை ஆக்கிடச் செய்வதும் நம் இயக்கப் பணியாகும். இதற்கென அனுபவம் வாய்ந்த நல்லறிஞர்களைக் கொண்ட ஒரு பணிக்குழு (கூயளம குடிசஉந) இயக்கத்தால் உருவாக்கப்படும்.
காலத்தின் அருமையை இளைய தலைமுறைக்கு வற்புறுத்தல், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பணி என்ற காலந் தவறாமை,-காலம் இழந்தால் திரும்பவும் பெற முடியாத ஒன்று என்பதை அவர்களுக்கு உணர்த்துதல் எல்லாம் தந்தை பெரியார் கண்ட வாழ்வியல் முறையாகும்.

கடவுளை மற; என்ற தந்தை பெரியார் தந்த எதிர்மறை அறிவுரையோடு நிறுத்திக் கொள்ளாமல், மனிதனை நினை என்று உடனே சொன்ன, பொருள் பொதிந்த ஆக்கரீதியான அறிவுரையை ஏற்று செயல்படுத்தவேண்டியது நமது தலையாய கடமை அல்லவா, அருமை நண்பர்களே.

வேளாண்மையில், நாற்றங்காலில் உள்ள பயிர்களைப் பாதுகாத்து அதைப் பக்குவமாகப் பிடுங்கி, வயலில் தெளிவாக நட்டு, வேளாண்மை செய்தல் போல் அவர்களை, நிலத்தில் வளரும் பயிர்களாக்க, நாற்றங்காலையும் பாதுகாத்து நாற்றுநடும் பக்குவத்தினையும் ஆக்க வேண்டியது, இந்த சமுதாய இயக்கத்தின் கைம்மாறு வேண்டாத கடமைகளில் முக்கியம் ஆகும்.

இருவகை செயல்முறைத் திட்டங்கள்

வரலாற்றின் போக்கினை பற்பல நாடுகளிலும் மாற்றியுள்ள மகத்தான சாதனை மாணவ, இளைஞர் பட்டாளத்திற்கே உண்டு. அவர்தம் நல்வழிப்பட்ட பணிகளால் அவர்களை உருவாக்கும் பட்டறைதான் பெரியார் பாசறையாகும்!

இதனைச் செயலாக்க இரண்டு வகையான செயல்முறைத் திட்டங்களை வரும் 1997- ஆம் ஆண்டில் கழகம் செயல்படுத்தும்.

1.            இளைஞர் பயிற்சி முகாம் - பழகு முகாம் அமைத்து மாவட்டந்தோறும் - ஒருகூட்டம் - ஒன்றியந்தோறும் அடுத்த கூட்டம் என்று நடத்துதல் ஒருமுறை.

2.      அதை நடத்திடுவோர்க்கே கூட பயிற்சியாளர்கள், அலுவலர்கள் பயிற்சிமுகாம் (Instructors  Officers Training Camps) நடத்துவது, இதற்கென முழுநேர தனிப் பொறுப்பாளர்கள் கழகத்தால் தக்கார் நியமிக்கப்படுவர் (OTC - Instructors & Officers Training Camps ) கணினி (கம்ப்யூட்டர்) பயிற்சியும் இதில் அடங்கும்.
கொள்கை (Iron discipline) சீரிய கட்டுப்பாடு, சமூக உணர்வும் தோழமையும் (Sociability and Camaraderie ) இணைந்த உணர்வுடன் பழகும் பான்மை - இவைகளின் சின்னங்களாக நமது இளைஞர்கள் இருத்தல் வேண்டும்.
அதுவும் விதவைப் பெண், கணவனால் கைவிடப்பட்டவர்க்கு மறுவாழ்வு தரும் திருமணம் - ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்வதோடு ஆரியத் தத்துவமான வரதட்சணை என்பதை வெறுத்து ஒதுக்கும் வீரர்களாகத் திகழ்தல் முக்கியம்.

மூன்று முக்கிய உறுதிமொழிகள்

நமது இயக்கத்தில் இணையும் அவர்கள் தெளிவான மூன்று முக்கிய உறுதிமொழிகளை எடுத்தல் அவசியம்.

1.தலைமைக்கு நம்பிக்கையுடன் செயல்படுவேன்.

2.எனது கொள்கைக்கு ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டேன்.

3.எனது இயக்கத்தினை எல்லாவற்றிலும் மேலான முன்னுரிமை உள்ளதாகக் கருதிப்போற்றுவேன்.

வன்முறையோ, ரகசிய முறைகளோ தந்தை பெரியார் தம் அறிவு இயக்கத்திற்கு உடன்பாடான நடவடிக்கை அல்ல; அது என்றும் நம் அணுகுமுறையாக இருக்கவே கூடாது. தற்காலிகமாக அவைகள் (வன்முறை, ரகசிய நடவடிக்கை) சிற்சில வேளைகளில் பயன்தந்தாலும், தொலைநோக்கில் நிச்சயம் அவைகள் பயன்படாதவை.
அறிவு ஆசான் தந்தை பெரியார் - அறிவாயுதத்தாலே, பண்பட்ட நடத்தையாலேதான், மிகக் கடினமான கடவுள் மறுப்பையும் கூட, தமிழ்நாட்டில் எளிமையான காட்சியாக மாற்றிவிட்டார் என்பதை என்னருந் தோழர்களே மறவாதீர்! கருத்துப் பரிமாற்றங்களைக்கூட பண்பட்ட வாதங்களைக் கூறிக் கடும் எதிர்ப்புகளையும் வெல்ல முயற்சியுங்கள் என்பதே நமது வேண்டுகோள்.

1997-ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்கப் போகின்றது. இந்த நேரத்திலே நீங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போகிறீர்கள். திரும்பப் போவதற்கு முன்னாலே இந்த ஒரு ஆண்டு நீங்கள் கடுமையாக உழைப்பைக் கொடுத்ததுபோல இன்னும் 3 ஆண்டுகள் தோழர்களே நாம் தெளிவாக உழைத்தாகவேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கப்போகிற 21-ஆம் நூற்றாண்டு உறுதியாகப் பெரியார் நூற்றாண்டாகவே மலரக் கூடிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பு ஏற்படும்.

நாம் எப்படி பிரச்சாரம் செய்யவேண்டுமென்றால், பிரச்சார முறைக்காக நாம் தேடி அலைந்துக் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. பார்ப்பான் எப்படிப் பிரச்சாரம் செய்கின்றானோ அதை அப்படியே தலைகீழாக மாற்றிப் பிரச்சாரம் செய்தால் போதும். ஆனால் நம்முடைய முறை அறிவுப்பூர்வமான முறை, ஆழமான முறை.

கீதையில் முடங்கிப்போன பெரிய மனிதர்கள்

ஒரு சிறிய உதாரணம் சொல்லுகின்றேன். இந்த பகவத் கீதையைப் பற்றி நாட்டிலே சொல்லாதவர்களே இல்லை. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் இந்த மூடநம்பிக்கைகளில் முடங்கிப் போய்க் கிடக்கிறார்கள். ஆகா கீதை! ஆகா கீதை என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்களே தவிர அதில் என்ன இருக்கிறது என்பது ஒருவருக்கும் தெரியாது. அதன்மீது சத்தியம் செய்து வேறு கேட்கிறார்கள்.

தந்தை பெரியார் கேட்ட கேள்வி

தந்தை பெரியார் தான் கேட்டார். விவேகானந்தரும் கேட்டார். போர்க்களத்திலே சண்டை நடக்கின்றது. இரண்டு பேர் எதிரெதிர் அணியாக நிற்கிறார்கள். அப்பொழுது அர்ச்சுனன் காதில் கிருஷ்ணன் சொல்கிறானாம். அது அவ்வளவு பெரிய கீதை புத்தகமாக வந்திருக்கிறது. இது நடந்த செய்தியா? பகுத்தறிவுக்கு ஒத்த செய்தியா?
கிருஷ்ணன் உபதேசம் செய்கிற வரைக்கும் எதிரிகள் உட்கார்ந்து கொண்டிருந்தார்களா? உபதேசம் முடியட்டும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மா இருந்தார்களா? அல்லது கிருஷ்ணன் சொல்வதை எல்லாம் யாராவது சுருக்கெழுத்தில் (Short Hand எழுதிக் கொண்டிருந்தார்களா? என்று தந்தை பெரியார் கேட்டார்.
பகவத் கீதா மகாத்மியம்
அந்தக் கீதையை ஒரு நண்பர் என்னிடம் கொடுத்தார். பகவத் கீதா மகாத்மியம் என்று அந்த புத்தகத்திற்குப் பெயர். 1925இல் வெளிவந்த புத்தகம் இது. இந்தப் புத்தகத்தில் பல செய்திகளை எழுதியிருக்கின்றார்கள். வராக புராணத்துள்ள பகவத்கீதா மகாத்மியம் என்ற தலைப்பில் என்ன சொல்கிறார்கள் என்றால், அதை அப்படியே படிக்கின்றேன் கேளுங்கள்.
சர்வோத்கிருஷ்டமாகிய இப்பகவத்கீதையை அன்போடுங் கேட்டவர்கள் கிடைத்தற்கரிய இந்திர போகங்களை அனுபவித்து ஈற்றில் நான்காம் பதவியாம் சாயுச்சியத்தை யடையப் பெறுவார்கள். அன்றி அங்ஙன கேளாது உதாசினமாய்த் திரஸ்காரஞ் செய்தவர்கள் மீளா நரகத்துக்காளாதலோடு முடிவில் சர்வ ஜீவன்களினுங் கேவலமான பன்றியாய்ப் பிறந்துழன்று மாய்வரென்க.
இந்த கீதா நவநீதத்தை நிர்விசாரமாயிருந்து சாவதானமாக 18-அத்தியாயங்களையும் சிரத்தா புத்தியோடு பாராயணஞ் செய்பவர்களுக்கு ப்ரம்மஞானம் லபிக்கப்பெற்று மோட்ச மெய்துவரென்க.
இன்னும் இக்கீதை முற்றிலும் பாராயணஞ்செய்ய வியலாது பாதியையேனும் நித்திய கருமானுட்டான முடித்தபிறகு சுத்தமான ஸ்தானத்திலிருந்து சிரத்தையோடும் அன்போடும் பாராயணஞ் செய்பவன் எல்லாவுலகங்களினு மேலான தேவலோகத்திலே பிறந்து தேவபோகங்களை யனுபவிப்பனென்க.
மற்றும் மேற்கூறிய 9 அத்தியாயங்களைப் பாராயணஞ் செய்ய வியலாதவன் அதிற் பாதியையாவது உள்ளபடி யோதி வருவானாயின் அவனுக்குக் கோதானஞ்செய்த பலனுண்டாமென்பதிற் சம்சயமில்லை.
இன்னும் இப்பகவத் கீதையின் மூன்றிலொரு பாகத்தைத் தினமானம் பாராயணஞ் செய்பவனுக்குச் சோமயாக பலமும், அதிற் பாதியை பாராயணஞ் செய்பவனுக்கு அக்கினிஷ்டோயாகபலமும் சித்தியாமென்க.
இப்பகவத் கீதையில் ஒவ்வொருநாளும் ஸ்தானஞ்செய்து அநுட்டானாதிகள் முடித்து ஒவ்வொரு அத்தியாயங்களாகப் பாராயணஞ் செய்துவருபவனுக்கு உருத்திர லோகத்திலேயுள்ள பிரமதகணங்களோடு தானுமொருவனாயிருந்து வாழ்வனென்க.
இதன்றி கீதையில் ஏகதேசம் சிலவற்றை மட்டும் முறையாக பாராயணஞ் செய்பவன் தேகம் நீங்கிடினும் அவனுக்குப்பிறகு சாரூப பதவி கிடைக்குமென்க.
இன்னும் இக்கீதையினோர் சுலோகத்தையேனும் மரணாந்த காலத்தில் ஸ்மரித்து உயிர் துறப்பானாயின் அவனது மறுஜென்மம் பிரமஞானமுணர்ந்த பிராமணனிடத்தே யவதரிப்பனென்க.
இன்னும் இக்கீதா சாஸ்திர பாராயணஞ் செய்பவன் முன்னே மகாபாவங்களைச் செய்தவனாயினும் அப்பாவங்களனைத்தும் தாமரையிலைத் தண்ணீரனைய அவனைப் பற்றாதொழியுமென்க.
மற்றும் இக்கீதையின் பாராயண நடக்குமிடங்களிலும், கீதையிருக்குமிடங்களிலும், கீதார்த்த உபந்நியாச ஸ்தானங்களிலும், கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களும், சர்வ தேவர்களும், கோபால கோபிகைகளும், யோகியர்கள் முனிவர்களும், வைகுண்ட துவாரபாலகர்களும், நாரதர் உத்தவர் முதலிய சமஸ்தமான பிரபதிகளும் விஜயஞ் செய்வார்களென்க.
கீதை படித்தால் பாவங்கள் போகுமாம்
கீதையைப் படித்தால் கண் தெரியாதவனுக்கு கண் தெரியும், காது கேட்காதவனுக்கு காது கேட்கும் மோட்ச சாம்ராஜ்யம் வேண்டுபவர்களுக்கு மோட்ச சாம்ராஜ்யம் கிடைக்கும் என்பதை எல்லாம் இந்த நூலிலே எழுதிவிட்டு கடைசியாக என்ன சொல்லுகின்றான் என்று சொன்னால், இந்த கீதா சாஸ்திரப் பாராயணம் செய்பவன் முன்னே பாவங்கள் அனைத்தையும் செய்தவனாக இருந்தாலும் அவனுடைய பாவங்கள் அனைத்தும் தாமரை இலைத் தண்ணீராய் ஓடி விடும். அந்த பாவங்கள் அவனைப் பற்றாது ஒழியும்.
அவன் எல்லா பாவங்களை வேண்டுமானாலும் செய்யலாம். கொஞ்சம் பகவத் கீதையைப் படித்து விட்டால் போதும். எல்லாம் சரியாகிவிடும். இந்த மாதிரி இருந்தால் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் தோன்றுமா?
இந்த நாட்டில் அரசியல்வாதிகளிலிருந்து எல்லோரிடமும் ஒழுக்கம் கெட்டுப் போனதற்குக் காரணமே இந்த பகவத் கீதையைப் படித்ததால்தான்.
கீதை படித்தால் இறந்தவன் உயிர் பெறுவானாம்
இந்தக் கீதையின் சுலோகத்தை மரண காலத்தில் படித்தால் அடுத்த ஜென்மத்தில் பிராமணனாகப் பிறக்கலாமாம். இப்படி என்னென்ன புளுகியிருக்கிறான் பாருங்கள். அடுத்த ஜென்மம் என்று சொல்லுவதே ஒரு பித்தலாட்டம் அல்லவா? அதிலே இன்னொரு போனஸ் பித்தலாட்டத்தையும் புகுத்தியிருக்கிறார்கள்.
நீ உயர் ஜாதிக்காரனாக வருவதற்கு கீதை படித்தால் போதும் என்று சொல்லுகின்றான்.
எவ்வளவு பெரிய முட்டாள்தனங்களை இந்த நாட்டிலே அறிவியல் ரீதியாக பரப்புகிறார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
நமது பிரச்சாரங்களைப் பல திட்டங்கள் மூலமாக நாட்டு மக்களிடத்திலே பரப்பியாக வேண்டும்.
பெரியார் நகர்வு புத்தகச் சந்தை
நேற்று நீங்கள் பார்த்தீர்கள். நாம் பல லட்ச ரூபாய் செலவு செய்து லேலண்டு பேருந்து ஒன்றை வாங்கி பெரியார் நகர்வுப் பகுத்தறிவுப் புத்தகச் சந்தையினை உருவாக்கியிருக்கின்றோம். அந்தப் பேருந்திலே ஒரு பக்கத்திலே தொலைக்காட்சிப் பெட்டி இருக்கின்றது. பின்னாலே மேடை இருக்கிறது. யார் வேண்டுமானாலும் உள்ளே ஏறிப் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். அது 365 நாளும் தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி அந்தப் பிரச்சாரத்தை செய்ய இருக்கிறது நண்பர்களே.
அந்த பேருந்தை வடிவமைக்க ரூ.6 இலட்சம், ரூ.7 இலட்சம் ஆனது என்று சொன்னால் எப்படி எங்களாலே பெற முடிந்தது என்று கேட்டால் புதுக்கோட்டை இளைஞரணி மாநாட்டிலே எனக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கினீர்களே அந்தப் பணத்தைப் பேருந்து வாங்க திருப்பி விட்டோம். எனவே, அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய காலடியிலே இருந்து பயிற்சி பெற்ற காரணத்தினாலே நீங்கள் கொடுக்கிற ஒவ்வொரு சல்லிக் காசுகூட இந்த இயக்கத்தினுடைய பிரச்சாரத்திற்காகவும், மூடநம்பிக்கையின் மூலபலத்தையே முறியடிக்கக்கூடிய அளவுக்கு அது போய்ச் சேரும்.
தஞ்சையில் புத்தகச் சந்தை தொடக்கம்
அந்த அளவிலே பெரியார் நகர்வு புத்தகச் சந்தை ஜனவரி 21-ஆம் தேதி தஞ்சாவூரிலே இருந்து முதல் முறையாக தனது பிரச்சாரத்தைத் தொடங்க இருக்கின்றது. முதல் பிரச்சாரத் திட்டம் இதை அதற்கென்று இருக்கின்ற 10 தோழர்கள் அதைத் தெளிவாக செய்து கொண்டே போவார்கள், ஆங்காங்கே இருக்கிற இளைஞர்கள், இயக்கத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள், அனைத்துக் கட்சிப் பகுத்தறிவாளர்கள் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு தருவார்கள்.
இளைஞர்கள் பொறுப்பேற்கிறார்கள்
அடுத்து மிக முக்கியமான தத்துவம் என்னவென்றால் இளைஞர்கள் மத்தியிலே இந்தக் கொள்கை போய் சேர வேண்டும். இந்த இயக்கத்தையே கூட இன்னும் ஓராண்டு காலத்தில் முழுக்க இளைஞர்கள்தான் பொறுப்பேற்க போகிறார்கள் என்பதை உங்களுக்குச் சொல்லுகிறோம். அப்படியானால் வயதானவர்கள் எங்கே போய்விடுவார்கள் என்று கேட்க வேண்டிய அவசியமில்லை. வயதானவர்களாக இருக்கக் கூடிய நாங்கள் அனைவரும், நான் உட்பட இந்த இயக்கத்தின் காப்பாளர்களாக, காவலர்களாக என்றைக்கும் திகழ்வோம். நீங்கள் முன்னணி செயல் வீரர்களாக முன்னாலே நிற்பீர்கள்.
இயக்கத்தில் மகளிர்கள்
அது போலவே குழுவிலே நாடாளுமன்ற சட்டத்தின் மூலமாக மூன்றிலே ஒரு பாகம் மகளிர்களுக்கு இட ஒதுக்கீடு வருகிறதோ இல்லையோ, ஆனால் அடுத்து நம்முடைய மத்திய செயற்குழுவிலே மூன்றிலே ஒரு பாகம் மகளிர்கள்தான் இடம் பெறுவார்கள் என்ற ஒரு மிகப் பெரிய வாய்ப்பை உருவாக்குவோம். எதை நாம் பேசுகிறோமோ அதை நம் இயக்கத்திலே செய்து காட்டிவிட்டு பிறகு மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுவது தான் நம்முடைய இயக்கத்தின் வாடிக்கை.
மாணவர்களிடையே பிரச்சாரம்
அந்த வகையிலே உயர்நிலைப் பள்ளிகளில், மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கின்ற இளைஞர்களிடம் இந்தக் கொள்கைகள் போய் சேர வேண்டும். அதிலே தான் நிறைய பேர் இப்போது கயிறு கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். அவர்கள்தான் இப்போது மூடநம்பிக்கைகளுக்கு அதிகம் ஆளாகிறார்கள். அந்தப் பிள்ளைகளுக்கு அந்த இடத்திலே பசு மரத்தாணி போல் பதிய வேண்டும் என்பதற்காகத்தான் நண்பர்களே, மிகத் தெளிவான நிலையிலே முதன் முறையாக இளைஞர்களுக்கு - நம்முடைய மாணவரணிக்கு அந்த வேலையை நான் ஒப்படைத்திருக்கிறேன். அதற்கு ஏற்கெனவே திட்டமிட்டாகி விட்டது. அந்த மாணவரணித் தோழர்கள் வாயிற்கூட்டங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு போவார்கள்.
ஒவ்வொரு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு முன்னாலே தமிழ்நாடு முழுவதும், வரிசையாக, திட்டமிட்டு தங்கு தடையேயில்லாமல் இப்பிரச்சாரம் நடைபெறும். அந்த முதல் வாயிற்கூட்டம் தொடங்கப்படும் இடம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லுகிறேன். நடுநாயகமாக இருக்கிற இடத்தில் தொடங்கி, பிற இடங்களுக்குப் போவார்கள். தொடங்குகிற நாள் 06-01-1997 மாணவரணித் தோழர்கள் ஜீப் ஒன்றிலே வருவார்கள். அந்தப் பகுதியிலிருக்கக்கூடிய பிற தோழர்கள் அங்கே அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள். ஒலி பெருக்கி மற்றும் பிற வாய்ப்புகளை வைத்துக் கொண்டு நம்முடைய புத்தகங்கள், துண்டறிக்கைகள், கொள்கைப் பிரச்சாரங்களை ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு, அய்ந்து மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில் அவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். அடுத்ததாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைப் பிரச்சாரம், பகுத்தறிவுப் பிரச்சாரம் நடைபெற வேண்டும்.



கழகத் தோழர்களை உபசரியுங்கள்
புத்தகச் சந்தையிலேகூட அதிகம் செலவழிப்பதாக நாம் இல்லை. புத்தகச் சந்தைக்கு, மற்றும் கிராமப் பிரச்சாரத்திற்கு வருகின்ற தோழர்களை நம்முடைய கழகத் தோழர்கள் இல்லங்களுக்கு அழைத்து உபசரியுங்கள்.
ஒவ்வொருவரும் அன்புடன் பழகுவது முக்கியம். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலங்களில் பேச்சாளர்கள் விடுதிகளில் தங்கியது இல்லை. கழகத் தோழர்களுடைய இல்லங்களில்தான் தங்குவார்கள். அப்படித் தான் குடும்ப ரீதியான பற்று இந்த இயக்கத்திலே ஏற்பட்டது.
கிராமங்கள் கணக்கெடுப்பு
தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களைக் கணக்கெடுப்போம். இதற்காக ஒரு திட்டமிட்டிருக்கின்றோம். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள், ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி இவைகளைப் பற்றி எல்லாம் திட்டமிட்டு ஒரு நாளைக்கு இவ்வளவு தூரம் சென்று கழகத் தோழர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டிருக்கின்றோம்.
அதற்கு வேன் ஏற்பாடு செய்யப்பட்டு அதிலே நம்முடைய கழகத் தோழர்கள் வேகமாகப் பிரச்சாரம் செய்வார்கள்.
3 ஆண்டுகள் கிராமப் பிரச்சாரம்
ஒவ்வொரு மாவட்டமாக இப்படிப் பிரச்சாரம் செய்து, வரக்கூடிய மூன்று ஆண்டுகளிலே தமிழகத்திலே இந்தக் கொள்கைப் பிரச்சாரம் பரவாத கிராமமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் நடைபெறும்.
இந்தக் கிராமப் பிரச்சாரத் திட்டம் 2000மாவது ஆண்டில்தான் முடியும்.
ஜனவரியில் கிராமப் பிரச்சாரத் திட்டம்
இந்தக் கிராமப் பிரச்சாரம் தொடங்கத் திட்டமிட்டிருக்கின்ற நாள் ஜனவரி 20. இடம் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி; அங்கிருந்துதான் முதல் கிராமப் பிரச்சாரத் திட்டம் தொடங்கப்படும்.
நானே இருந்து அதைத் தொடங்கி வைப்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இப்படி இந்த மூன்று முனைகளிலும் கழகப் பிரச்சாரம் மிகத் தெளிவாக நடந்து கொண்டிருக்கும். இதில் எவ்விதமான சங்கடமும் இருக்காது. இந்த நேரத்திலே இளைஞர்களுக்கு, தோழர்களுக்கு ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். ஏற்கெனவே நம்முடைய மாநாடுகளிலே சொன்னேன் - சிறைச்சாலைகளிலே சொன்னேன். இப்போதும் சொல்லுகிறேன் - நம்முடைய இளைஞர்கள் நல்ல உடல் நலத்தோடும், உள்ள வளத்தோடும் இருக்க வேண்டும்.
கராத்தே பயிற்சி தொடங்குங்கள்
அருள்கூர்ந்து ஆங்காங்கே கராத்தே பயிற்சி மன்றங்களை இளைஞர்கள் ஏற்பாடு செய்து கராத்தே பயிற்சி, உடற்பயிற்சிகளைத் தெளிவாகச் செய்யுங்கள்.
போதை பழக்கம் கூடாது
அதோடு திராவிடர் கழகத்தில் கருப்புச் சட்டை அணிவது  எவ்வளவு  முக்கியம் என்று கருதுகின்றீர்களோ அதுபோல புகை பிடித்தல், மது போன்ற தவறான பழக்க வழக்கங்கள் இல்லாதவர்கள்தான் தந்தை பெரியாரின் தொண்டர்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.
எனவே, நாம் கடவுள் இல்லை என்று சொன்னால் மட்டும் போதாது. இந்தக் கொள்கைக்கு மரியாதை சேர்க்கின்ற வகையிலே நாம் ஒழுக்கத்துடன் நடக்க வேண்டும். நாணயம், நேர்மை இவைகள் எல்லாம் சேர்ந்து இருந்தால்தான் நமது கொள்கைக்கு மேலும் வலுவூட்டக் கூடியதாக இருக்கும்.
சிறைச் சாலையிலே நாங்கள் இருந்த பொழுது நமது கழகத் தோழர்கள் புகைப்பிடிக்கின்ற பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும் என்று நான் சொன்னபொழுது, 30 வருடம் புகைப்பிடித்துக் கொண்டிருந்தவர்கள், 40 வருடம் புகைப்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம்விட்டு விட்டார்கள்.


பீடி, சிகரெட் வாங்க மறுப்பு
நேர்காணலுக்கு வந்த தோழர்கள் சிறைச்சாலையில் உள்ள கழகத் தோழர்களுக்காக பீடி, சிகரெட் வாங்கிக் கொண்டு வந்தார்கள். பொதுச் செயலாளர் புகைப் பிடிக்கும் பழக்கம் கூடாது என்று சொல்லிவிட்டார்; எனவே, இனி எங்களுக்கு பீடி, சிகரெட் தேவையில்லை என்று கொண்டு வந்த பார்சல்களை எல்லாம் அப்படியே திருப்பி அனுப்பி விட்டார்கள்.
சிறைத் துறை அதிகாரிகள் வியப்பு
இதைப்பற்றி சிறைச்சாலையில் உள்ள அதிகாரிகள் வந்து சொன்னார்கள். என்ன சொன்னார்கள் தெரியுமா? என்னய்யா, நாங்களும் இத்துணை வருடமாக இதே சிறைச் சாலையில் இருக்கின்றோம். இந்த சிறையில் ஒரு பீடிக்காக ஒவ்வொரு கைதியும் படுகிறபாடு எப்படிப்பட்டது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். யாராவது ஒருவர் குடித்துவிட்டு மீதி கீழே போடுகின்ற பீடியைத் தேடி குடிக்கின்ற இடம்தான் சிறைச்சாலை; சிறைச்சாலைக்கு கொண்டு வந்த பீடி, சிகரெட்டுகளை திருப்பி அனுப்பி விட்டார்கள். இப்படி ஒரு இயக்கத்தை நாங்கள் பார்த்ததில்லை என்று அந்த சிறைச்சாலை அதிகாரிகள் வியந்து சொன்னார்கள். நான் சொன்னேன், அந்தப் பெருமை எனக்கல்ல, என்னுடைய அறிவு ஆசான் தலைவர் தந்தைபெரியார் அவர்களுக்கு என்று சொன்னேன்.
இரட்டை வாழ்க்கை கூடாது
ஒரு கடினமான கொள்கையை சொல்லும் பொழுது ஒழுக்கத்திலே உறுதியாக இருக்க வேண்டும். நமக்கு இரட்டை வாழ்க்கை கிடையாது.
அண்ணா அவர்கள் பகுத்தறிவைப்பற்றி சொல்லும்பொழுது சொன்னார், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலே What is Rationalism?  என்பதற்கு அண்ணா அவர்களே அந்தக் கேள்வியைத் தொடுத்து பதில் சொன்னார்கள். பகுத்தறிவு வாதம் என்பது வேறொன்றுமில்லை. இரட்டை வாழ்க்கை முறையை ஒழிப்பது.
எல்லாவற்றுக்கும் கடவுள் காரணம் என்றால் வயிற்று வலிக்கு யார் காரணம்? சங்கராச்சாரி உட்பட டாக்டரிடம் தானே போகிறார். மகான்கள் உள்பட மருத்துவரிடம் தானே போகிறார்கள். ஆனால் கடைசியாக இந்த டாக்டர்களே என்ன சொல்லுகின்றார்கள்? என் கையிலே இருப்பது எல்லாம் முடிந்து போய்விட்டது. இனிமேல் எல்லாம் ஆண்டவன் விட்டவழிதான் என்று சொல்லுவார்கள். அதாவது அவர்கள்தங்களுடைய திறமையை மறைத்துவிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஆட்களுக்கும் நாங்கள் ரொம்ப அழகாக பாடம் சொல்லிக் கொடுத்திருக்கின்றோம். எல்லாம் அவன் செயல் தானா? அப்படியானால் பீஸ் தொகையை அவனிடமே கொடுத்து விடுகின்றோம் என்று சொன்னோம். பீஸ் மட்டும் டாக்டரிடம் போகவேண்டும் செயலுக்கு மட்டும் காரணம் ஆண்டவனா? இதுதானே இரட்டை வேடம். இது தானே இரட்டை சிந்தனை.
அடுத்ததாக நான் காலையில் நடைபெற்ற பெண்ணுரிமை மாநாட்டில் கூடச் சொன்னேன். நம்முடைய தோழர்களுக்கும் தான் சொல்லுகின்றேன். வெறும் கடவுள், மதம், பகுத்தறிவு கருத்துக்களை மாத்திரம் பிரச்சாரம் செய்தால் போதாது. ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் எந்த இடத்தில் நடந்து கொண்டாலும் பண்போடு நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய இயக்கத்தில் தானே இந்தப் பெருமை இருக்கின்றது.
மாநாட்டில் ஒரு அசம்பாவிதம் உண்டா?
இந்த மாநாட்டிலே ஆண்களும், பெண்களும் கலந்து உட்கார்ந்திருக்கின்றீர்களே எங்காவது ஒரு சிறு அசம்பாவிதம் நடக்குமா? மூன்று நாட்களாக இந்த மாநாடு நடக்கின்றது. யாராவது ஒரு சகோதரி வந்து புகார் செய்வார்களா? இவ்வளவு பெரிய கூட்டம் மகாமகத்திலே கூடினால் என்ன ஆகும்? திருவிழாவில் கூடியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? தாய்மார்கள் ஒழுங்காக திரும்பியிருக்க முடியுமா?
தந்தை பெரியார் அவர்கள் அவருக்கே உரிய நளினத்தோடு சொல்வார்கள் - திருவிழாவுக்கு ஒருவன் மனைவியோடவும், குழந்தையோடவும் போவான். மனைவியைப் பின்னாலே வரச் சொல்லிவிட்டு இவன் முன்னால் போவான். குழந்தையை தோளிலே சுமந்து கொண்டு அவஸ்தையோடு செல்லும் பொழுது அப்பொழுது சொல்வானாம்.
மீதி பத்திரத்தைப்பற்றி கவலை இல்லை
காது பத்திரம், கழுத்து பத்திரம் என்று அடிக்கடி சொல்லுவானாம். அய்யா அவர்கள் சொல்லுவதை நான் அப்படியே சொல்லுகின்றேன். காது பத்திரம், கழுத்து பத்திரம் என்பதைப் பற்றி சொல்லுகின்றானே இவனுக்கு மீதி பத்திரத்தைப் பற்றிக் கவலை இல்லை என்று அய்யா அவர்கள் சொல்லுவார். அப்படி எல்லாம் ஒழுக்கக்கேடாக அந்த இடத்தில் நடக்கும்.
கோவில்கள் விபசார விடுதிகள்
அதனால்தான் காந்தியார் அவர்களே சொன்னார், கோவில்கள் விபசார விடுதிகள் என்று; இதே தமிழ் நாட்டில்தான் சொன்னார். இன்றைக்கு காந்தீயம் பேசுவான். ஆனால் இதைப் பேச மாட்டான். கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார் தான் மனிதனை நினை என்று சொன்னார்கள்.
மத்திய அமைச்சர்  டாக்டர் சந்திரசேகர் ஒரு முறை தந்தைபெரியார் அவர்களை பேட்டி காண்கிறார். அவர் உலக ஜனத்தொகை மற்றும் பொருளாதார நிபுணர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனக்கே பேராசிரியராக இருந்தவர். அய்யா அவர்களுக்கு வேண்டிய குடும்பத்தைச் சார்ந்தவர் அவர்.
ஆங்கிலம் பேசினால் இன்றைக்கு எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். இந்திராகாந்தி அமைச்சரவையிலே சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கின்றார். அந்த நிலையிலே அய்யா அவர்களிடம் பேட்டி காண்கிறார். அப்பொழுது அய்யா அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
மத்திய அமைச்சர் கேட்ட கேள்வி
குடும்பக் கட்டுப்பாட்டை மக்கள் அதிகம் பின்பற்றவில்லையே எல்லோரும் ஆண் குழந்தை வேண்டும் என்பதையே அதிகம் விரும்புகின்றார்கள். பெண் குழந்தை என்றால் வெறுக்கிறார்கள். இதற்கு வழிமுறைதான் என்ன? உங்களுடைய அனுபவத்தின் மூலம் இதற்கு என்ன பதில் என்று கேட்டார்.
அய்யா அவர்கள் பகுத்தறிவு பகலவனாக இருந்த காரணத்தால் கம்ப்யூட்டரில் தட்டின உடனே பதில் சொல்லுகின்ற மாதிரி பதில் சொன்னார். இந்த ஒலிப் பதிவு எங்கள் வீட்டில்தான் நடந்தது. தந்தை பெரியார் அவர்கள் வானொலியில் ஆற்றிய உரை ஒலி நாடாவாகக்கூட வெளிவந்திருக்கிறது.
தந்தை பெரியார் சொன்ன பதில்
அய்யா அவர்கள் அதற்கு பளிச்சென்று பதில் சொன்னார். அதில் ஒரு கஷ்டமும் இல்லீங்களே என்று சொல்லிவிட்டு சொன்னார். சந்திரசேகர் அவர்கள் இது ரொம்ப சிக்கலான பிரச்சினை என்று நினைத்துக் கொண்டு கேட்கின்றார். ஆனால் அய்யா அவர்கள் மிக எளிமையாக பதில் சொல்லுகின்றார்.
பெண்கள் மக்கள் தொகையில் 50 சதவிகிதம் இருக்கின்றார்கள். அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 50 சதவிகிதம் கொடுத்துவிட்டால் ஒரு கஷ்டமும் இருக்காதே.
பெண்களுக்கு வாய்ப்புகள் இல்லை என்பதால்தானே ஆண்குழந்தை வேண்டும் ஆண் குழந்தை வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆணுக்கும் ஒரே வாய்ப்பு, பெண்ணுக்கும் ஒரே வாய்ப்பு என்றால் எந்தக் குழந்தை இருந்தால் என்ன என்றுதானே நினைக்கத் தோன்றும், என்று அய்யா அவர்கள் பதில் சொன்னார்.
உடனே சந்திரசேகர் அடுத்தக் கேள்வி கேட்டார். அப்படியானால் ஆண்கள் அதை எதிர்ப்பார்களே என்று கேட்டார். அதற்கு அய்யா அவர்கள் உடனடியாக பதில் சொன்னார்.
அய்யா அவர்கள் பதட்டமே படவில்லை. ஏங்க எதிர்க்கப் போகிறார்கள்? என்று சொல்லிவிட்டு அய்யா அவர்கள் சொல்லுகின்றார், இப்படி கேள்வி கேட்பவருடைய மகளுக்கு கிடைக்கும் பொழுது, அவருடைய தங்கைக்குக் கிடைக்கும்பொழுது, அவருடைய அக்காவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்பொழுது, அவர்களுடைய வீட்டைச் சார்ந்தவர்களுக்கே 50 சதவிகிதம் கிடைக்கும் பொழுதுஏன் எதிர்க்கிறார்கள்? என்று அய்யா அவர்கள் சொன்ன உடனே சந்திரசேகர் அவர்கள் கைதட்டி சிரித்தார். இது எனக்குப் புரியவில்லைங்களே என்று சொன்னார். அவர் அமெரிக்காவில் படித்தவரே தவிர, பெரியார் பகுத்தறிவுப் பள்ளியில் படிக்கவில்லை. அவருக்கு எப்படி புரியும்? படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆகவேதான் நம்முடைய தோழர்களுக்கு ஒழுக்கம், ஒழுக்கம் என்பதை வலியுறுத்தி சொல்லுகின்றேன்.

பெரியார் என்பது ஒரு வாழ்வியல். அதை இந்த மாநாட்டுத் தலைமை உரையிலே நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

தி.மு.. அரசுக்கு பாராட்டு

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உள்ளாட்சி மன்றங்களுக்கு தமிழ்நாட்டில் தேர்தலை நடத்திய தி.மு.. அரசு நமது பாராட்டுதலுக்குரியதாகும்.

மக்களாட்சியில் அடித்தளத்து அமைப்புகளான இந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஊர் நலம் பேணவும், சமுதாயத்தின் ஒட்டு மொத்தமான தேவைகளை பல வழிகளில் புரிந்து செயலாற்றவும் அது வழிவகை செய்வதாகும். எனவே அந்த அமைப்புகள் சிறப்பாக செயல்பட அனைத்துத் தரப்பினரும் அரசு உட்பட ஒத்துழைப்பதே சிறப்பான வளர்ச்சியை உருவாக்க உதவிடுவதாகும்.

இனி எதிர்காலத்தில் இந்த உள்ளாட்சித்துறைத் தேர்தல்கள் எக்காரணத்தைக்கொண்டும் அரசுகளால் தள்ளிவைக்க முடியாத அளவுக்கு பொதுக் கருத்தும், விழிப்புணர்வும் மக்களிடையே இருக்க வேண்டும்.

நூல் இலட்சியத்தைநோக்கி 
ஆசிரியர் -கி.வீரமணி 

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!