கல்வி என்றால் என்ன?
தோழர்களே!
கல்வி என்னும் விஷயமாய் நான் பேசுவது
என்றால், எனக்கு அதிக தைரியம் வேண்டும். ஏனெனில், மக்கள் பெரும்பாலோர்
கல்வி என்பதற்கு என்ன பொருள் கொண்டிருக்கிறார்களோ அந்தக் கல்வி எனக்குக்
கிடையாது. பிழையற எழுதக்கூடத் தெரியாதவன் - அவையடக்கமாக நான் இதைச்
சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு வல்லினம், இடையினம் கூடச் சரியாகப்
பிரயோகிக்கத் தெரியாது. அது மாத்திரமல்ல, ஒரே சந்தர்ப்பத்தில் ஒரு
வாக்கியத்தில் ஒரு வார்த்தை இரண்டு தடவை வருமானால் ஒரு தடவை வல்லினம்
போடுவேன்; மறுதடவைக்கு இடையினம் போடுவேன். அந்த மாதிரியான நான், உங்கள்
முன் கல்வி என்பதைப் பற்றிப் பேசுவது என்றால் அது எவ்வளவு கஷ்டமான காரியம்
என்று பாருங்கள். ஆனாலும் உங்கள் விருப்பத்திற்கும் எனது ஆசைக்குமாக ஏதோ
என் அபிப்பிராயத்தைக் கூறுகிறேன். நீங்கள் அதை அப்படியே
ஒப்புக்கொண்டுவிடாமல், நன்றாய் ஆலோசித்து கொள்வது கொண்டு, தள்ளுவதைத்
தயங்காமல் தள்ளி விடுங்கள்.
கல்வி
கல்வி என்றால் என்ன? பள்ளிக்கூடத்தில்
சர்க்கார் பள்ளிக்கூட அதிகாரிகள் ஏற்படுத்தின திட்டப்படி அவர்கள்
குறிப்பிடும் விஷயங்களைக் கொண்ட புத்தகங்களை உருப்போட்டு பரிட்சை கொடுத்து
தேர்வு அத்தாட்சி பெறுவதையே அனேகம் பேர் கல்வி என்று கருதி இருக்கிறார்கள்.
அன்றியும் இப்படிப்பட்ட கல்வி கற்பது என்பது அறிவு விளக்கத்திற்காக
என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே கல்வி என்பதற்கு கருத்து ஒன்று, சொல்லு
மற்றொன்று என்று சொல்லக் கூடியதாய் இருப்பதோடு கல்வியின் பயனாய் நடந்து
கொள்ளும் நடத்தை மற்றொன்றாக இருக்கிறது. அதாவது கல்வி என்பது வயிற்றுப்
பிழைப்புக்கும் எப்படியாவது வாழ்க்கை நடப்புக்கும், பெருமைக்கும்தான்
பயன்படுத்தப்படுகின்றது. இப்படி மூன்று விதமாகப் பயன்படுத்தப்படும்
கல்வியில் மக்களுக்கு ஏற்படும் பணச் செலவும், நாள் செலவும், ஊக்கச் செலவும்
அளவு சொல்ல முடியாததும் சாதாரண மக்கள் தாங்க முடியாததும் ஆகவே இருக்கிறது.
கல்விக்கு லட்சியமில்லை
பொதுவாகவே நான் சொல்லுவேன் நம் மக்களுக்கு
கல்வி கற்பிப்பதில் நமக்கு லட்சியம் ஒன்றுமே கிடையாது. யார் எதைப் படிக்க
வேண்டும்? படித்த படிப்பு எதற்குப் பயன்படும்? என்கின்ற ஒரு யோசனையே
பெற்றோர்களுக்குக் கிடையாது. படிப்பது என்பது எதையோ படிப்பதும் படிப்பு
வரக்கூடிய பிள்ளையாய் இருந்தால் படித்துக் கொண்டே போவதும், படிப்பு
வராவிட்டால் நிறுத்திவிடுவதும், படித்துப் பட்டம் பெற்றுவிட்டால் அன்று
முதலே வேலை தேடித் திரிவதும் ஏதோ கிடைத்த வேலையை ஒப்புக்கொண்டு அதன் மூலம்
வாழ்க்கை நடத்துவதும், தன் தனிப்பட்ட குடும்பம் முன்னுக்கு
வரப்பார்ப்பதும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதும் ஆகிய இவைதான்
கல்வியின் தன்மையாய் இருக்கிறது. எந்த வேலைக்கு எவ்வளவு படிப்பு வேண்டும்
என்பதில் மனிதனுக்கு சிறிதும் ஞானமே கிடையாது - தனிப்பட்ட மனிதனின்
வாழ்க்கை நலத்திற்கே கல்வியைப் பயன்படுத்துவது கல்வியின் பயனாக
ஆகிவிட்டதால் கல்வி கல்லாத மக்கள் என்பவர்களுடைய நாணயம், ஒழுக்கம்
என்பதைவிட கற்றவர்கள் என்பவர்களுடைய நாணயமும் ஒழுக்கமும் மிகமிக மோசமாகவே
இருக்கும்படி படித்த அநேகர் நிலைமை ஏற்பட்டுவிட்டது. கல்வி,
தந்திரத்திற்கும் மற்ற மக்களை ஏய்ப்பதற்கும் கற்றிருக்கிறோம் என்பதற்கு ஆக
சராசரி மனிதத் தன்மையைவிட பல மடங்கு தங்களைப் பெரியவர்களாக எண்ணிக்
கொள்ளவும் நடவடிக்கையில் சராசரி மனித நாணயத்தை, நடத்தையைவிட பலமடங்கு
மோசமாய் நடக்கவும் ஏற்பட்டுவிடுகிறது.
கல்வி மக்களைச் சுரண்டுகிறது
இன்றையக் கல்வி, கல்வியின் பேரால் மற்ற
மக்களைச் சுரண்டுவதற்கே பயன்படக் கூடியதாக ஏற்பட்டுவிட்டதால் கல்வி
கற்றவர்கள் என்பவர்களுக்கு மற்ற மக்கள் நலத்தைப்பற்றிக் கவலையே இல்லை.
அதிலும் இராஜதந்திரம், அரசியல் என்கின்ற இரண்டு தலைப்பின் கீழ் எவ்வளவு
அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டாலும் குறை கூறப்படுவதில்லை. ஆதலால்
கற்றவர்கள் என்பவர்கள் தங்களது நாணயமற்ற தன்மையை நடத்திப் பயன் பெற
அரசியலையும் இராஜ தந்திரத்தையும் கையாள மோகம் ஏற்பட்டு விடுகின்றது. ஆகவே
இன்றைய கல்வி அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும், அன்புக்கும் பயன்படுவது இல்லை
என்பது மாத்திரமில்லாமல் பல கேடுகளுக்கும் காரணமாக இருக்கின்றது.
இதில் மற்றொரு தன்மை என்னவென்றால் கல்வி
கற்பது என்பது இன்று செல்வவான்களுக்கும் செல்வ சவுகரியம்
இருப்பவர்களுக்கும் எள்ளளவும் ஒழுக்கமும், நாணயமும், மானமும் இல்லாமல்
பணம் தேடத் துணிகிறவர்களுக்கும்தான் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க
முடிகின்றது . சிறிய பணக்காரர், சிறிய வரும்படிக்காரர், சராசரி
வாழ்க்கைக்காரர்கள் நாணயத்துக்கும், மானத்துக்கும் பயந்து வாழ்க்கை
நடத்துகிறவர்கள் ஆகியவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க
ஆரம்பித்தார்களேயானால் அவர்கள் மிக்க ஏழ்மைக் குடும்பத்தார்களாகவும்
தரித்திரக்காரர்களாவும் சதா துன்ப வாழ்க்கை நடத்துகிறவர்களாகவும் ஆகிவிட
நேரிடுகின்றது.
சர்க்கார் நிலை
சர்க்காருக்கு இந்தக் கல்வியைப் பற்றிய
ஒரு பொறுப்புணர்ச்சியே கிடையாது என்றே சொல்லலாம். சாதாரணமாக சர்க்காரின்
கல்வித் திட்டத்தின் கருத்து என்னமாயிருக்குமென்று யூகித்தறியவே முடியாமல்
போகிறது. ஆனால் அது எப்படி முடிகின்றது என்று பார்த்தால் அநாகரிக மக்கள்
அல்லது கீழ்த் தர மக்கள் செல்வவான்கள் ஆகாமல் கஷ்ட வாழ்வு நடத்தும்படி
செய்வதற்கு கள்ளுக்கடைகள், சூதாடுமிடங்கள், விபசாரி இல்லங்கள் எப்படி
இருந்து வருகின்றனவோ அதே போல் நாகரிக உணர்ச்சி உள்ள மக்கள் கஷ்ட ஜீவனம்
நடத்திக்கொண்டு வறுமை வாழ்வு வாழ்ந்துகொண்டு இருக்கவும் கையில் ஏதாவது ஒரு
சிறு அளவும் சேர்த்து வைக்க முடியாமல் அடிமைத் தன்மைக்கு எப்பொழுதும்
தயாராக இருக்கவும் மக்களைக் கட்டாயப்படுத்துவதற்கு அனுகூலமாக யோசித்துச்
செய்யப்பட்ட காரியம் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
கோயில், பண்டிகை, திருவிழா, சடங்கு
முதலியவைகளும் பெருவாரியான மக்களை இந்த நிலைக்குத்தான் கொண்டு போகிறது
என்று சொல்லப்பட்டாலும் அது வருணாசிரம தர்மத்தை நிலை நிறுத்தச் செய்த
காரியம் என்னலாம். ஆனால் இந்தப் படிப்பு முறை அரசியல் ஆதிக்கத்தைக்
குறிவைத்து ஒரு கூட்ட மக்களை அரசியல் அடிமையாக இருப்பதற்கு ஆகச் செய்த
காரியம் என்றால் எண்ணத்தில் மாற்றம் இருந்தால் இருக்கலாமே ஒழிய பயனில்
மாற்றம் இருக்காது என்பேன்.
B. A., M.A.,
சர்க்காரார் மக்களை B. A., M.A.,
படிக்க வேண்டும் என்று சொல்வதிலோ, அந்த யோக்கியதாம்சம் வேண்டுமென்று
கேட்பதிலோ, அதற்கு ஆக சர்க்கார் பொருள் செலவழித்து ஸ்தாபனம், இலாகா
ஏற்படுத்தி இருப்பதிலோ என்ன நியாயமும் அவசியமும் கண்டுபிடிக்க முடிகிறது
என்று கேட்கிறேன்.
சர்க்கார் உத்தியோகத்துக்கு B. A.,,
வகுப்பு தேர்வு வேண்டியிருக்கிறது. அந்த பி.ஏ., தேர்வுக்கு இலக்கியம்,
பூகோளம், சரித்திரம், கணக்கு, விஞ்ஞானம் (சைன்ஸ்) முதலியவை படித்து
உருப்போட்டுத் தேரவேண்டி இருக்கிறது. இந்தப் படிப்புக்காரர்களுக்கு
சர்க்கார் கொடுக்கும் உத்தியோகங்களுக்கு அவர்கள் உத்தியோகம் பார்க்கும்
காலங்களில், அல்லது தன்மைகளில் மேற்கண்ட இலக்கியம், பூகோளம், சரித்திரம்,
கணக்கு, சைன்ஸ் இவ்வளவு தேவை இருக்கிறதா? அல்லது பயன்படுகிறதா? என்று
கேட்கிறேன். தேவை இல்லையென்றால் சர்க்கார் செய்வது தப்பான காரியமா இல்லையா?
என்று கேட்கிறேன்.
ஒரு முஸ்லிம் உத்தியோகத்திற்கு வந்தால்
அவனுக்கு ஒருமாதிரி யோக்கியதாம்சம் இருந்தால் போதுமென்றும், ஒரு
ஆதிதிராவிடன் வேலைக்கு வந்தால் அவனுக்கு ஒரு யோக்கியதாம்சம் இருந்தால்
போதுமென்றும், ஒரு திராவிடனும் ஒரு ஆரியனும் (பார்ப்பானும்)
உத்தியோகத்திற்கு வந்தால் அவனுக்கு ஒரு மாதிரி யோக்கியதாம்சம் இருக்க
வேண்டுமென்றும், ஒரு அய்ரோப்பியனுக்கோ அல்லது ஆங்கிலோ இந்தியனுக்கோ
வேறுமாதிரி யோக்கியதாம்சம் இருக்க வேண்டும் என்றும் தரம் பிரித்திருப்பதின்
கருத்து என்ன?
முஸ்லிமுக்கும், ஆதிதிராவிடனுக்கும் சற்று
குறைந்த படிப்பு யோக்கியதாம்சம் போதும் என்று சர்க்கார் ஒரு பத்ததி
வைத்திருக்கிறார்கள். இந்த இரு சமுகத்தாரும் திராவிடர், ஆரியர், என்கின்ற
இரு சமுகத்தாரை விட அதிபுத்திசாலிகளாகக் கருதப்பட்டு அவர்களுக்குக் கல்வி
யோக்கியதை குறைக்கப்பட்டு இருக்கிறதா? அல்லது அவர்கள்
புத்திசாலித்தனத்துக்கு அவ்வளவுதான் படிக்க முடியும் என்று கருதி
குறைக்கப்பட்டிருக்கிறதா?
(02-03-1944 அன்று ஈரோடு இலண்டன் மிஷன்
கம்யூனிட்டி டிரெயினிங் ஸ்கூலில் கல்வி என்னும் பொருள் பற்றி தந்தை
பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
(குடிஅரசு - சொற்பொழிவு - 01.04.1944 நூல்
Comments
Post a Comment