மதிப்பிடுவதில் கைதேர்ந்தவர்




பெரியார் மனிதர்களையும் சூழல்களையும் துல்லியமாக மதிப்பிடுவதில் கைதேர்ந்து விளங்கினார். இயற்கை மதிநுட்பத்தோடு ஆழ்ந்த அனுபவம் பெற்ற பெரியாரின் மதிப்பீடு எவ்வளவு துல்லியமானது என்று பார்ப்போம்.

இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலம். சென்னை மாகாணத்தில், நேசக் கட்சியின் வெற்றிக்கு ஆதரவு திரட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவில் தந்தை பெரியார் உறுப்பினராக இருந்தார்.

அவ்வமயம், சீனாவின் அதிபர் சாங்கேஷேக், இந்தியாவிற்கு வந்தார். சென்னை நகரத்திற்கும் வந்தார். அதையொட்டி ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சாங்கேஷேக் உரையாற்றினார். பெரியாரும் பேசினார்.

கூட்டம் முடிந்தபின், பெரியார் தம் இல்லத்தில் கட்சித் தோழர்களோடு பேசிக் கொண்டிருந்தார். நானும் உடன் இருந்தேன். பெரியார் உரையாடலின்போது, இந்த சாங்கேஷேக்கிற்கு சீன மக்களிடம் செல்வாக்கு இல்லை. அமெரிக்கர்கள் இவரை உயர்த்தி நிறுத்தி ஆட்டி வைக்கிறார்கள். சீன மக்களின் தலைவராக இவர் நெடுங்காலம் இருக்க முடியாது என்று கூறினார்.

நொடிப் பொழுது தோழர்களுக்கு அதிர்ச்சி. அடுத்த நொடி, ஒன்று புலனாயிற்று. அது என்ன? பொதுக் கூட்டத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவு கொடுக்க வேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி பேசிய பெரியார், சாங்கேஷேக்கைப் பற்றி மக்கள் எதிர்பார்த்த அளவு, புகழாததற்குக் காரணம் விளங்கி விட்டது.

காந்தியாரின் உண்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கிய பெரியார், பின்னர் அவரோடு கருத்து வேற்றுமை கொண்டார். அவ்வேற்றுமை, எதில் முளைத்தது? காந்தியார், ஜாதியொழிப்பின் மேல் நாட்டம் செலுத்தவில்லை. ஜாதி வேற்றுமைகளுக்கு ஆணிவேராகிய பார்ப்பனீயத்தைத் தாக்க வரவில்லை. மாறாக, வருணாசிரம தர்மத்திற்குப் புது விளக்கம் சொல்லி, அதை உயிர்ப்பிக்க முனைந்தார். இவை நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் தீங்கானவை என்பது பெரியார் முடிவு. எனவே காந்தியத்தின் எதிரியாகிவிட்டார்.
ஒரு சமயம் பெரியார், காந்தியாரைப் பற்றி எழுதும்போது, என்றைக்கு காந்தியடிகள் தீண்டாமை ஒழிப்பிற்கும் ஜாதி சமத்துவத்திற்கும் பாடுபட முனைகிறாரோ, அன்று முதல் பார்ப்பனர்கள் காந்தியாரின் மகாத்மா தன்மையை அழித்து விடுவார்கள் என்று எழுதினார். இதைப் படித்துவிட்டுப் பதறிய பல நல்லவர்களை நான் அறிவேன். ஆனால், பிற்காலத்தில் நடந்தது என்ன? காந்தியாரின் தொண்டு சமுதாய மாற்றத்தின்பால் சாய்வதைக் கண்டதும், மகாத்மா தன்மையை அல்ல, மகாத்மாவையே ஒழித்துக் கட்டிவிட்டார்களா இல்லையா?

மற்றோர் கணிப்பு: 1963ஆம் ஆண்டு, முதல் அமைச்சர் காமராசர், தமது பதவியை துறந்துவிட்டு, அனைத்திந்திய காங்கிரசின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதாகச் செய்தி வெளியாயிற்று. உடனே பெரியார், காமராசருக்குத் தந்தி அடித்தார்.

நீங்களாகவோ அல்லது மற்றவர்களின் ஆலோசனைப்படியோ முடிவு செய்திருந்தாலும் முதல் அமைச்சர் பதவியை விடுவது, தங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் தற்கொலையாக முடியும் என்பது பெரியாரின் தந்தி.


பெரியாரின் கணிப்பு நூற்றுக்கு நூறு சரியென்பதை பிந்திய வரலாறு மெய்ப்பித்துவிட்டது.

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை