தந்தை பெரியார் காஞ்சிபுரத்தில் ஆற்றிய சொற்பொழிவு
தந்தை பெரியார் காஞ்சிபுரத்தில் ஆற்றிய சொற்பொழிவு (16.2.1957)
(தந்தை பெரியார் உரைத் தொகுப்பு)
தலைவர் அவர்களே தாய்மார்களே தோழர்களே காமராசர் ஆட்கள் வந்தால் தமிழ்நாடும் தமிழ்நாடு அரசாங்கமும் எவ்வளவு நன்மைஅடையக் காத்திருக்குது, இவுக (தி.மு.க) கேட்ட பணம் டில்லி அரசு தருவார்களா? பத்து அல்லது அஞ்சு நாலாவது பணம் வராதா? திரு.டி.டி.கிருஷ்ணமாச்சாரி இல்லாட்டா - வேறுயாரு நிதி மந்திரி? நீங்கள் கொஞ்சம் நல்லா பொறுமையோடு பின் காரியத்தைச் சிந்திக்கணும். அ.கிருஷ்ணமாச்சாரி இல்லாவிட்டால் நிதி மந்திரி யாரு? ஒரு ஆளு நிதிமந்திரிக்கு அஸ்திவாரம் போட்டுகிட்டு இருக்கிறப்ப, ஒரு வடநாட்டு மனுஷன் இந்த நாட்டுக்கு வந்து நாலஞ்சு லட்ச ரூபாய் செலவு பண்ணிகிட்டு போயிருக்கிறானே? எப்படியாவது கிருஷ்ணமாச்சாரியை ஒழிச்சிக் கட்டனும்னு. அவுக கொடுத்த ரூபாய் அவுக உட்கார்ந்திருந்த இடம், அவுககிட்டே உட்கார்ந்திருந்த கண்ணீர்துளி (தி.மு.க)ஆளுங்க எல்லாம் எனக்குத் தெரியும்! அந்த இடத்திலே நடந்ததை நடந்தபடி எனக்கு வந்து சொன்னாங்க, வந்திருந்த ஆள் பேரு ஏ.டி.ஷராப். அவர் இறங்கின இடம் கண்ணிமாரா ஹோட்டல் ரூம் நெம்பர் எழுபது.
தேர்தல் சபதம்
தேதி 17-1-1957 இல் அன்றைய தினமே இங்கே ஒரு ஆளுகிட்டே ரூ.15,000/- (பதினைந்தாயிரம்) கொடுக்கும் போது பாக்கி ரூ. 70,000/- (எழுபதினாயிரம் ரூபாயை) இன்னொரு ஆளு கிட்டே கொடுத்திட்டுப் போன உடனே பாக்கியை அனுப்புகிறேன்னு போயிருக்கிறாரு. கூட இருந்து பங்கு வாங்கினவர் - யார் வீட்டிலே சாப்பாடு? பக்கத்திலே இருந்து பேசிகிட்டு இருந்த, கண்ணீர்துளி (தி.மு.க) என். வி. நடராசன் (கைதட்டல்) இவர்களுடன் மூன்று மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். பிறகு சி.ஆர்.(ராஜாஜி)யுடன் பேச்சு. பிறகு எதிர்த்த கேன்டிடேட்டுக்கு ரூ.15,000 (பதினைந்தாயிரம்) கொடுத்தார். இரண்டு மூணு நாளிலே வந்து என்கிட்டே சொல்லிட்டு போனாங்க. நானும் அந்தக் கூட்டத்திலே இருந்தேன்னு, இவ்வளவு காரியம் எதுக்காகன்னா? டி.டி.கிருஷ்ணமாச் சாரியை நிதி மந்திரியாக வராமல் ஒழிக்கணும். சமயம் வந்தால் காமராசரையும் ஒழிக்கணும்.
கிருஷ்ணமாச்சாரி ஒழிஞ்சா வடநாட்டானுக்கு கட்டாயம் ரொம்ப சவுகரியம். பிர்லாவும் பணம் கொடுத்தான். டாட்டாவும் பணம் கொடுத்தான். இந்த ஷராப்பும் பணம் கொடுத்தான். அவ்வளவு பணம் இந்த நாட்டிலே வந்தது. அந்தப் பணத்திலே அனேக காண்டிடேட்டுகளுக்கு மிச்சமாச்சு, அவுக சொந்த பணம் ஒரு காசு கூட செலவாகலே. இந்த மாதிரியெல்லாம் நம்ம நாடு கொள்ளை போகிறதுக்கு நாமெல்லாம் உடந்தையாய் இருக்கிறதா? இதைப் பார்க்கிற போது நான் கிருஷ்ணமாச்சாரிக்கு ஆதரவு கொடுத்தேன்கிறது ஒரு பெரியதப்பா? ஆகவே இன்னைக்குச் சொல்றேனே இது பொய்யாய் இருந்தால் கிருஷ்ணமாச்சாரியாரே திட்டமாட்டாரா? நான் பார்க்கவே இல்லைய்யா கிருஷ்ணமாச்சாரியை. அந்த ஆளுகிட்டே இரண்டு பேச்சி பேசி அறியேனய்யா? ஏதோ ஒரு நாள் என் நண்பர் இராஜகோபாலச்சாரியார் வீட்டுக்குப் போனபோது, இவர் (கிருஷ்ணமாச்சாரி) அங்கே வெளியே நடையிலே உட்கார்ந்திருந்தார். அப்ப அந்த சண்டை (2ஆவது உலகப்போர் நடக்கிற) சமயத்திலே. 2ஆவது உலகப் போர் 03.09.1939ல் ஆச்சாரியார் பதவி விலகல் 29.10.1939இல் அப்ப அந்த ஆச்சாரியார் என்னைக் கூப்பிட்டது நீ மந்திரி வேலையை ஒத்துக்க, நான் உனக்கு உதவி பண்றேன், எப்படியாவது இந்த தடவை சரி மந்திரி சபையை ஒழிக்கணும். அப்படீன்னு சொல்றதுக்காக என்னைஅழைச்சிருந்தார். அப்பநான் அங்கே போனேன், அப்படி சொல்றபோது நான் (அங்கே) வெளியே இருக்கிறேன்னு நீங்கள் ரகசியம் பேசுங்கன்னு (கிருஷ்ணமாச்சாரி) நடையிலே போய் உட்கார்ந்துகிட்டார்.
அவரை நான் அன்னைக்குப்பார்த்தது தான், இன்னமும் அவரை நான் பார்த்ததில்லை. அவரு (டி.டி.கே) பள்ளிக்கூடத்துப்பையனாக இருக்கிறபோது எனக்கு தெரியும், அவுங்கஅய்யா எங்க ஊரிலே (ஈரோட்டிலே) முன் சீப்பாய் இருந்தார். அப்ப எங்களுக்கு ரொம்ப நேசம், அப்ப ஊரிலே நான் ஒரு பெரிய ஆளு. அவரு சொல்றார் எங்க வீட்டு சங்கதி எல்லாம். மற்றபடி அவரை எனக்குத் தெரியவே தெரியாது, அவரை ஒரு நாளாவது சந்தித்துப் பேசியதே இல்லை, எங்கேயும் என் பேச்சில் நான் பேசினாலும் அவரை நான் விட்டுவைத்துப் பேசறதுமில்லை.
அய்யரையும் ஆதரித்த பெரியார்
ஆனதினாலே பொதுவாக இந்தக்காரியத்திலே (தேர்தலிலே) கிருஷ்ணமாச்சாரியை மாத்திரமா நான் ஆதரிச்சேன். சீரங்கத்திலே வாசுதேவ அய்யாங்காரை ஆதரிச்சேன் கும்பகோணத்திலே சம்பத்- அய்யங்காரை ஆதரிச்சேன், சர்.பி.ராமசாமி அய்யர் மகன் பட்டாபி ராமனை அந்த ஆளை ஆதரித்தேன், பட்டுக்கோட்டையில் யாரோ ஒரு சீனிவாசனை ஆதரிச்சேன், இன்னும் எங்கெங்கேயோ நான் ஆதரிச்ச பாப்பானிலே தோத்துப்போன ஆளு இந்த காஞ்சிபுரம் தான், ஏறக்குறைய நான் போன ஆளுக எல்லாம் ஜெயிச்சாங்க, என்னமோ அந்த ஆளுக எல்லாம் இப்ப நம்ம காமராசருக்குக் கையாளாக இருப்பாங்கன்னு தான் நினைச்சேன், அது தான் காரணம்.
அய்யமாரை ஆதரிக்கிறேன்னா காமராசருக்கு கையாளுன்னு தான் , அய்ந்தாம் படையாய் இல்லாமல், சூழ்ச்சி பண்ற ஆளாய் இல்லாமே - இந்த மாதிரி இருப்பாங்களேன்னு, இந்த காரியத்துக்காகத்தான் என் ஆதரவு, இந்த ஆளுங்களுக்கு எதிர்த்து நிறுத்தின ஆளுங்க எல்லாம் மோசமான ஆளுங்க, கும்பகோணத்திலே (கே,கே) நீலமேகம் நின்னாரு, என்ன நியாயம்? நீலமேகத்துக்கு அடுத்த ஓட்டு கூட விழலே, கொஞ்ச ஓட்டுதான் பெற்றாரு, சீரங்கத்திலே யார்யாரோ நின்னாங்க, அத்தனை பேருக்கும் டெபாசிட் போச்சி, அவுகளுக்கும் அங்கங்கே கொஞ்சம் வசதி இருந்தது, ஏதோ காமராசர் நிறுத்திட்டாரு, யார் காங்கிரசாலே நிறுத்தப்பட்டாங்களோ அவுங்களை நம்ம ஆள்கள் கூடுமானவரைக்கும் ஆதரிச்சோம், காங்கிரசு 150 பேர் வருவாங்கன்னாங்க, காங்கிரஸ் வெற்றி பெற்றது, செய்ய வேண்டிய காரியம் ரொம்ப அவசியம்னுதான் செய்தேன், என்னாலே தவறு ஏதும் வந்திடும்னு நினைக்கலே, சிலபார்ப்பனர்களை ஆதரிக்க வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு தடவையும் ஆதரிச்சிக்கிட்டு தான் வந்தேன், போன தடவை கூட சர்மாவை ஆதரிச்சேன். அரசியலில் அயோக்கியத்தனம் இன்னைக்கு அவர்களுக்குப் பொழுது விடியனும், தெருவுக்கு ஒண்ணா - அங்கொன்னு - இங்கொன்னு சொல்ல வேண்டியது அவுகளுக்கு அந்த கவலையே இல்லையே, பேசி நேரத்தைத் தாட்டிக்கிட்டா போதும், அவுங்களுக்கு அந்த அளவுக்கு, நாங்கள் அப்படி இருக்க முடியுமா? அவர்கள் பேசுவது எனக்கு முக்கியமாகத் தோணலேய்யா. உண்மையாகவே இதெல்லாம் இருக்கிறவங்க பண்ணட்டுமே, நான் என்னா எதிர்த்தா வரப்போகிறேன்? முதலிலே காமராசர் உட்காரட்டும் திட்ட வட்டமா. அவர் இடம் கொஞ்சம் பத்திரமாகட்டும்.
ஏதோ சில காரியங்களாவது நடக்கட்டும். மற்றதெல்லாம் எனக்கு 2ஆவது 3ஆவது சங்கதி. சர்க்காரோடு ரகளை பண்ணுகிறதுக்கு ஒரு வழி அவ்வளவு தானே. சட்ட சபை இங்கு இருப்பதைக் கோட்டைக்குக் கொண்டுப்போனால் உனக்கு என்னா நோவுது? ஏதாவது ரகளை - என்னமாவது ஒண்ணு - முக்கியமாக ஏதாவது ஒரு திட்டம் போட்டுக்கிட்டு, அய்யா நாங்கள் இந்த மாதிரி சொல்றேன், சட்டசபையிலே எதிர்க்கட்சியாக இருக்கிறாப்பிலே மாத்திரம் இருக்கலாம்னு நினைச்சா, அது பொறுக்கித் தின்னத்தான் உதவும் (கைத்தட்டல்) சட்டசபையிலே எதிர்க்கணும், வெளியே வந்து மக்களுடைய ஆதரவு பெறணும் - கிளர்ச்சி பண்ணனும். அதுக்கு அவுக பயப்படனும். அந்த மாதிரி யோக்கியதை உங்களுக்கு இருந்தால் நீ ஒரு எதிர்க்கட்சியாக இருக்க லாயக்கு. உனக்கு ஆளே இல்லையே? உன் பேச்சை எவன் கேட்க போகிறான்? நீ சொல்லேன், எவன் வருவான்? இது சினிமாவா?
எதிலே நீ நாலுபேரைக் கிளர்ச்சி பண்ணி ஒரு உணர்ச்சி உண்டாக்கினே? அந்த மாதிரி உம்கிட்டே ஒரு ஸ்தாபனம் இருந்து, ஒரு தடை இருந்து, மாட்டேன்னு சொன்னா, ஏதாவது ரகளை - நீ பண்ணுவேங்கிற - ஒரு கூத்து - உன்கிட்டே இருந்தா நீ அந்த சட்டசபையிலே போயிருந்தா அய்யா என்ன சொல்றீங்கன்னு - காதை உன்கிட்டே ஒதுக்கி உன்னைக் கேட்பான், இப்ப உன்னைக் கண்டால் எதுக்காக மதிக்கணும்? எதுக்காக உனக்குப் பதில் சொல்லணும்? என்னா அவனுக்குப் புரியாததை நீ கேட்கப் போறே? சும்மா இதெல்லாம் பாசாங்கு வேடிக்கை, அதனாலே எதிர்க்கட்சி என்பது எல்லாம் நீங்கள் பாருங்களேன், உண்மையாக அய்யா சொன்னதையே நான் சொல்றேன்.
இந்த ஆளுங்க எல்லாம் வந்தது உங்களுக்குப் பெரிய தொல்லையாக இருக்கும்னு சொன்னாங்களாம் ஒரு ஆளுகிட்டேபோயி, ஆ, , , , , இது என்னா தொல்லை? ஒரு இரண்டு மூணு நாளைக்கு முனைஞ்சிப்பாப்பானுங்க, அப்புறம் என்கிட்டேயே அந்த வேலை வேணும் - இந்த வேலை வேணும் - சினிமா வேணும் பாங்க, உத்தியோகம் வேணும்பாங்க, வாங்கிட்டுப் போறாங்க, அவ்வளவு தான், எதைக் கொண்டு சொல்றீங்க?கண்ணீர்த்துளி (தி.மு.க.) சங்கதி அப்படிதானே ஆச்சி! ஆகாசத்துக்கும் - பூமிக்கும் குதிச்சாங்க கம்யூனிஸ்ட்கட்சி. அப்புறம் அரசிடம் சலுகை பெற்றானுங்க. அது மாதிரி ஓட்டுப்போட்டவன் வந்தால் இவுக நிறையா செய்தாகணும். அரசாங்கத்திடம் சிபாரிசுக்குப் போயாகனும், அது ஆகட்டும்னா தீர்ந்துப்போச்சி. நீ நாளைக்கு போயி எதிர்த்துப்பேச முடியுமா? சட்டசபையிலே கேள்வி கேட்க முடியுமா? அவனிடம் (அரசியல்) நீ ஒரு சின்ன உபகாரம் வாங்கினேயானால்? (சிரிப்பு)
அரசியல் வெறும் பித்தலாட்டம்
அய்யா அந்த தொழிலினுடைய யோக்கியதையை நான் சொல்றேன், முடியாது பண்றதுக்கு அங்கே சரக்கு இல்லே, பண்ணும் படியான இடமும் கொடுக்கலே, காங்கிரஸ்காரன், இன்றைய தினம் காங்கிரஸ்காரன் இந்த நாட்டிலே இருக்கிற எல்லாக் கட்சிக்காரனையும் விட முன்னேற்றக்காரனாகப் போயிட்டானே? அரசியல் வெறும் பித்தலாட்டம், உன் பித்தலாட்டத்தை நானே பண்றேன்னுட்டாரு அவரு (நேரு). அவருக்கு மேலே யாரும் பேச முடியலியே, சோஷலிஸ்டா? ஓ , , , நான் அதைத்தானே சொல்லிகிட்டு இருக்கிறேன். கம்யூனிஸ்டா? கம்யூனிஷ அடிப்படையில்தானே நாங்கள் இருக்கிறோம், அதுக்கு மேலே நீ என்னா பண்ணப் போறே? நீ எது சொன்னாலும் அதுக்குமேலே, அதுக்கு மேலே அவுங்க போராங்க. அதனாலே ஒருத்தருக்கும் இடமில்லாமல் அவ்வளவு பந்தோபஸ்தான இடத்திலே அவுக உட்கார்ந்துக்கிட்டாங்க. எல்லா தீவிரமான கொள்கையும் இப்போ காங்கிரசிலே தான், ஊரிலே இருக்கிறவன் எல்லாம் இவ்வளவு தீவிரமாகப் போகலாமான்னு எதிர்க்கிறான்.
இந்த நாட்டிலே மிராஸ்தார் கொள்கை பெரிய கொள்கை. என்ன நியாயம்? அவனுக்கு நீ உதவி பண்ணலாமோ?- நீ ஒரு (தி.மு.க.) கண்ணீர்த்துளி. மிராஸ்தாரா 60 க்கு 40 பண்ணிட்டான், கீ - கீ ன்னு முழிக்கிறான் மிராஸ்தார், ஆனால் மிராஸ்தாரன்100க்கு மூன்றுபேர் இருப்பான், உழுகிறவனும், தொழிலாளியும் 100 க்கு 80 பேர் இருப்பான், யாருக்கு நல்லது? அதுக்கு விரோதம் பி.டி.ராஜன் அவர்கள். அவருக்கு அனுகூலம் நீயி அப்புறம் என்னா நீ ஜனங்களுக்கு அனுகூலம்? நீ போய் ஆச்சாரியாரைக் கேட்டால் என்னத்துக்கு 60 க்கு 40ம்பார், 50-50 ஆகவாவது இருக்க வேண்டாமா? அதைதான் நீ சொல்லப்போறே, வேறு நீ என்னா சொல்லுவே.
இந்த ஆச்சாரியரே சொல்கிறாரே இன்றைய தினம் நமக்கு ஒரு பலமான எதிர்க்கட்சி வேணும், அந்த எதிர்க்கட்சிக்கு வேலை என்ன வென்றால்?பத்தாயிரம் ஆண்டுகளாக இந்து சமுதாயத்தில் இருந்துவரும் பழக்கத்தையே மாற்றும் விதத்தில் பெண்களுக்குச் சொத்துரிமையாம், விவாகரத்து உரிமையாம், சட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள், இவ்விதம் செய்தது அதர்மம் - அக்கிரமம் - அநியாயம், இதை எதிர்க்க வேண்டும், காங்கிரசுக்கு எதிராக வரும் எதிர்க்கட்சிகளின் வேலை இதுவாக தான் இருக்க வேண்டும், ஆச்சாரியார் சொல்வார் இதையே கல்கியில் எழுதியிருக்கிறார், நீ போயி அதைத்தானே சொல்லி, எதிர்க்கட்சியாகவே இருக்கணும், அவன்தான் (காங்கிரசு) உனக்கு மேலே தாராளமாய்ப் போட்டுட்டானே,
பொம்பளைக்கெல்லாம்சமசொத்துண்டு,பொம்பளைக்கெல்லாம் கல்யாண ரத்துண்டு, எது - எது வேணுமோ அதையெல்லாம் சொல்லியாச்சு, திராவிடர் கழகம் என்னென்னா சொல்லிச்சோ அதை அப்படியே பூராவும் செய்தானா (கைதட்டல்) இல்லியா? வாக்கியம் அதே வாக்கியம் போட்டுட்டான். அடுத்தாப்பிலே எதிர்க்கட்சி எதுக்கு வேணும்? ஆச்சாரியார் காமராசரின் மூணு காரியத்தைச் சொல்றார்; எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு நியாய வாரச்சட்ட பிரகாரம் 70 வாங்கித்தருவாதாகச் சொல்லிக் கொள்கிறார்;, இப்படியே போனால் அது எங்கே போய் முடியும்? எனவே 60 வாரம் தருவதாகச் சட்டமியற்றிய காங்கிரசை எதிர்ப்பதாக வரும், கட்சியே எதிர்கட்சியாக இருக்க வேண்டும், ஆச்சாரியர் இதை எழுதுகிறார்.
அடுத்தாப்பிலே பெரும் பணக்காரனுக்கு மரண வரி போடுவது என்ன நியாயம் என்கிறார்? ஒரு பணக்காரர் இறப்பதற்கு முன்னாலேயே அவர் செத்துவிட்டாரா என்றல்லவா வரிவசூல் பண்ணுகிறவன் கேட்டுக் கொண்டே போவான்? அதிலே இவருக்கு (ஆச்சாரியாருக்கு) என்னா நட்டம்? ஆகையினாலே அதற்கு எதிர்ப்பாக, எதிர்கட்சி இருக்க வேண்டும். இது ராஜா சர்,முத்தய்யா செட்டியார் குரல் அல்ல, இது ராஜாஜியின் குரல். அப்படீன்னு எழுதுகிறார், இந்த எதிர்க்கட்சிதானே நீ பண்ண முடியும்? ஆச்சாரியார் யோசனைப்படி போனால் வேறு என்னா சொல்லுவே? எட்டாவது வகுப்புவரை பசங்க படிச்சால் சம்பளமில்லை என்கிறார் காமராசர், ராஜாஜி பணத்துக்கு எங்கே போகிறதுங்கிறார்? நீயும் போயி அதைத்தானே சொல்லணும், எட்டாவது வரைப் படிச்சா பணத்துக்கு எங்கே போகிறதுன்னு? சில பேருக்குப் பத்தாவது வரை சம்பளமில்லை, புத்தகமும் தருகிறேன் என்கிறார் காமராசர், ராஜாஜி இதுக்கெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு பணம் ஏதுங்கிறார்? ஒரு வேளை படிச்சால் போதும்னார் ராஜாஜி, (ராஜாஜி முதல்வராய் இருந்தபோது 1952 லே குலக்கல்வித் திட்டம்;
ஒரு வேளை படிப்பு, ஒரு வேளை அப்பன் தொழில் செய்வது என்று திட்டம் கொணர்ந்தார், அதைக் காமராசர் 18.05.1954ல் நீக்கினார்) இவரு காமராசர் சம்பளமில்லாமல் எல்லாப் பசங்களும் படிச்சாங்கன்னா, எதிர்க்கட்சியாக இருந்து நீ இதைதானே வேண்டாம்னு சொல்லவேண்டும். நீ பத்தாவது வரை படிச்ச பிறகு பி.ஏ. வரை சம்பளமில்லாமல் படிப்புச் சொல்லி கொடுன்னு நீ சொல்ல முடியுமா? உனக்கு யோக்கியதை உண்டோ? படிப்புக்குப் பணத்துக்கு வரி போடணும், நீ எவனுக்கு வரி போடுன்னு எழுதி கொடுப்பே? இருக்கிற வரியை குறை - குறைன்னு நீ பேரு வாங்குகிறவன். நீ எந்த வரியைப் போடுன்னு சொல்லமுடியும்? அவுங்களுக்குத்தான் சக்தி உண்டு வரி போட . போட்டவரியை நிறைவேற்ற அவுங்களுக்குத்தான் சக்தி உண்டு. அந்த (வரி)ப் பணத்தை சரியாக பயன்படுத்துவதற்கு ஒரு தமிழன் இருந்தால்தான் அது நமக்கு உதவும். அங்கே ஒரு பாப்பான் இருந்தால் அது பாப்பானுக்கு தான் உதவும், இது தானே - அரசியல், நாங்கள் பழகின வரைக்கும், இதிலே எதை எதிர்ப்பே நீ?
என்னத்துக்காக நீ மிராஸ்தார் கட்சியோடு சேர்ரே- சொல்லுங்க? எதுக்காக நீ அவருக்கு (ராஜாஜிக்கு) ஆதரவு கொடுக்கிறே? வியாபாரி பாடுபடறான், - எதுக்காக அவனுக்கு ஆதரவுக் கொடுக்கிறே?, அவன் ஏதோ விற்பனை வரி வெங்காய வரிங்கிறான், அவன் ஒரு கட்சி, அவன் ஆதரிக்கிறான் அவரை, நீ அதுக்கு உதவியா? என்ன நியாயம்?, ஆகவே ஒரு எதிர்க்கட்சி என்பது அவ்வளவு விளையாட்டல்ல உங்களைப் போன்றவர்களுக்கு, - அதுக்கு வேண்டிய திறமை வேறெ - அதுக்கு வேண்டிய புள்ளிவிவரங்கள் வேறெ - உட்கார்ந்துகிட்டுப் பாடுபடணும் - அதுக்குக் கணக்குப்போடணும், நீ எதிலே கணக்கு போடுவே?
அரசியல் சட்டத்திலே அனுகூலம்
எங்களுக்கு இருக்கிற ஒரு சந்தோஷமெல்லாம் இந்த அரசியல் சட்டத்திலே நமக்கு அனுகூலமா ஒரு பிரிவு இருக்குது, நல்லா கவனிச்சிக்கங்க என்னா அது? அரசியல் சட்டத்தில் 29ஆவது பிரிவு, அதில் 2 வது பிரிவு உள்ளது, அதில் இந்த பிரிவு இல்லாவிடில் 29 வது பிரிவு 2 வது பகுதியிலாவது உள்ளது எதுவும் குடிகளின் சமூக நெறியிலும் - கல்வியிலும் - பிற்பட்ட வகுப்பினர்களின் - முன்னேற்றத்திற்காகவாவது அல்லது அனுபந்த ஜாதியர்கள், மலை ஜாதியர்கள் இவர்களுக்காவது இராஜ்யம் எத்தகைய விஷேச ஏற்பாடுகள் செய்வதையும் இந்தக் சட்டம் தடை செய்யாது, இது இந்த அரசியல் சட்டத்திலே ஒரு பிரிவு, இது யாராலே ஏற்பட்டது, நம்மாலே ஏற்பட்டது, இந்த அய்க்கோர்ட்டிலே, வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் செல்லாதுன்னு போட்டாங்க பாருங்க, 1950 ஜூலையில் அதற்காக இங்கே நாம பெரிய கிளர்ச்சி பண்ணி னோமே, உங்களுக்கெல்லாம் தெரியாது ஊர்வலம். அன்னைக்குத் தான் இந்து ஆபிசிலே போலீசும் கூர்காவும் கூடி இருந்தாங்க - சுதேசமித்திரன் ஆபீசிலே போலீசும், கூர்க்காவும் கூடி இருந்தாங்க - எங்கே நாம அங்கே போயி புகுந்து விடுகிறமோன்னு போலீஸ்காரர்களும் ரகளை பண்ணி அந்த வீதியிலே போகாதே - இந்த வீதியிலே போகாதேன்னு நம்மை ஆடுகளை ஓட்டுறாப்பிலே, வேறெ பக்கம் நம்மை ஓட்டினாங்க அவ்வளவு பெரிய ஊர்வலம் அது, 14.12.1950 அந்த ஊர்வலம் மத்திய அரசாங்கத்தை நடுக்கம் பண்ணிவிட்டு விட்டது. அந்த ஊர்வலத்தையும் இந்த கண்ணீர்துளிகள் (தி.மு.க) எதிர்த்தாங்க. ஊர்வலத்துக்கு யாரும் போகாதேன்னு சொன்னாங்க. அப்பீலிலே பார்க்கலாம், ஏன்டா போறீங்கன்னு கேட்டாங்க? எப்படியோ, அந்த நம் ஊர்வலம் ஒன்று மிரட்டி, நாம தீர்மானம் போட்டதுக்கு அப்புறம் 07.04.1949 முதல் 09.04.1952 வரை முதலைமைச்சர் குமாரசாமி ராஜா நம்ம தீர்மானத்தை எடுத்துகிட்டு டில்லிக்கு ஓடினாரு. எட்டு நாளிலே இந்த பசங்க கிளர்ச்சியை ஆரம்பிச்சிடுவாங்க, எங்களாலே அவுங்களை சமாளிக்க முடியாது, நல்ல பிரச்சினை அவுக கையிலே சிக்கிப் போச்சி (பள்ளிப்) பசங்கள் எல்லாம் அவுங்களோடு சேர்ந்து கிட்டாங்கன்னு.
தந்தை பெரியார் காஞ்சிபுரத்தில் ஆற்றிய சொற்பொழிவு (16.2.1957)
நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி
Comments
Post a Comment