சிறிதும் அஞ்சாமல்
ஈ.வெ.ரா.வின் பொது வாழ்வு மிகுந்த சிறப்புடையது;
தன்னலமற்றது,
நேர்மையுடையது.
இளமைப் பருவ முதல் இப்படித்தான். இளமைப் பருவத்திலேயே ஜாதி பேதம் அறியாதவர்; மத வேறுபாடு உணராதவர்; கிருஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்,
முஸ்லீம்கள் முதலிய எல்லா வகுப்புப் பிள்ளைகளுடனும் நன்றாகப் பழகியவர். எப்பொழுதும்
10 பேர்கள் கூடவே இருப்பார்கள்.
வயதேறிய பின்னும் பல வகுப்பினரையும் தோழராகக் கொண்டிருந்தார். ஈரோட்டில் எவ்வகுப்பினர் வீட்டில் எந்த நன்மை, தீமைகள் நடைபெற்றாலும்,
முதலில் அங்கு அவரைக் காணலாம். யாவரும் இவரை அழைப்பார்கள். சில சமயங்களில் அழைப்பில்லாமலே சென்றுவிடுவார்.
தோழர்களும் உடன் செல்வார்கள்.
அவ்வீட்டுக் காரியங்களைத் தாமே முன்னின்று நடத்துவார்.
காரியங்கள் முற்றும் நிறைவேறிய பின்புதான் வீடு திரும்புவார். இவருடைய இவ்வியற்கைக் குணத்தினால் ஊரார் முழுவதும் இவரை உற்ற தோழராகக் கருதினர். குடும்ப விவகாரங்கள்,
வியாபாரத் தகராறுகள், சண்டை - சச்சரவுகள் தீர்த்த வண்ணமே இருப்பார்.
கோர்ட்களிலிருந்தும் விவகாரங்கள் இவரது தீர்ப்புக்கு வரும். எப்படிப்பட்ட விவகாரத்தையும் பைசல் செய்து விடுவார்.
ஒரு சமயம் ஈரோட்டில் பிளேக் நோய் வந்துவிட்டது. அதனால் மக்கள் பலர் மடிந்தனர்.
மற்றவர்கள் அஞ்சி ஊரைவிட்டு ஓடிவிட்டனர். செல்வர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு எல்லோருக்கும் முந்தி ஓடிவிட்டனர். போக்கிடமில்லாத ஏழை மக்களே ஊரில் தங்கி உள்ளம் நடுங்கியிருந்தனர். அச்சமயம் ஈ.வெ.ரா.
வெளியே போகாமல் தமது தோழர்களுடன் சிறிதும் அஞ்சாமல் ஊரிலிருந்து அந்த ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்தார். இச்சமயத்தில் அவர் நடந்துகொண்ட தைரியத்தை இன்றும் பலர் புகழ்வர். அனேக பிணங்களைத் தாமே தூக்கிக் கொண்டு போவார். இந்நிகழ்ச்சியால் அவர் பலராலும் போற்றப்பட்டார்.
நூல்: தமிழர் தலைவர்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு – 1
Comments
Post a Comment